வான்டடாக போய் வண்டியில் ஏறிய வாசன்.. பாய்ந்தது வழக்குகள்.. எடப்பாடிக்கு ஆதரவாக தர்ணா நடத்தி சிக்கல்
சென்னை: உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற எடப்பாடி பழனிசாமி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், ஜிகே வாசன் மீதும் போலீசார் இப்போது நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
அதிமுக இன்னும் இரு பிரிவுகளாகவே இயங்கி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் என இருவருமே தாங்கள் தான் ரியல் அதிமுக எனச் சொல்லி வருகிறார்கள்.
இரு தரப்பும் எதிர்த்தரப்பை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த வாரம் சட்டசபை கூட்டத்தொடர் நடந்த நிலையில், அதிலும் கூட இந்த விஷயம் எதிரொலித்தது
ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி கொலை.. தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்.. ஜிகே வாசன் சர்ச்சை பேச்சு
எடப்பாடி பழனிசாமி
கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகவும் ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இதையடுத்து அவர்களுக்கு முன்வரிசையில் அருகருகே இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், இப்போது குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ஓபிஸுக்கு பதிலாக ஆர்பி உதயகுமார் எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளதாக எடப்பாடி தரப்பு சபாநாயகருக்குக் கடிதம் எழுதியது.
அடையாள உண்ணாவிரதம்
இருப்பினும், சபாநாயகர் அப்பாவு எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை அங்கீகரிக்கவில்லை. இதனால் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அருகருகே அமரும் நிலை ஏற்பட்டது. இதனால் செவ்வாய்க்கிழமை சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை அங்கீகரிக்காததைக் கண்டித்து, அதிமுக எம்எல்ஏக்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.
கைது
ஆனால் சட்ட ஒழுங்கை காரணம் காட்டி போலீசார், இந்த போராட்டத்திற்கு அனுமதி தர மறுத்தனர். இருந்த போதிலும், அதையும் தாண்டி எடப்பாடி தலைமையில் அதிமுக தலைவர்கள் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். கருப்பு சட்டை அணிந்தபடி உண்ணா விரதத்தில் ஈடுபட முயன்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் அப்படியே கைது செய்தனர்.
ஜிகே வாசன்
இதையடுத்து அவர்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் மாலை வரை வைக்கப்பட்டனர். அப்போது அங்கு முறையாகத் தண்ணீர் வழங்கவில்லை என்றும் எடப்பாடி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தச் சூழலில் ராஜரத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்த எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க அங்குத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜிகே வாசன் சென்றார்.
தர்ணா
அவரை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது போலீசாருக்கும் ஜிகே வாசன் தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் எடப்பாடியைச் சந்திக்க அனுமதி மறுத்ததால் ஜிகே வாசன் அங்கேயே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்குப்பதிவு
இந்தச் சூழலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மீது போலீசார் இப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஜி.கே.வாசன் மீது மொத்தம் இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.