"தலைமை சொன்ன ஒத்த வார்த்தைக்காக பொறுமையுடன் கடந்து போறேன்” - வைகோவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம்" என கிண்டல் செய்து இருந்தார்.
இந்நிலையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வைகோவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தொகுதி பங்கீடு, கூட்டணி ஆட்சி என தலைவர்களின் பரபரப்பு பேட்டிகள் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளன. குறிப்பாக ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ள விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
மாணிக்கம் தாகூர், தொடர்ச்சியாக திமுகவை சீண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்தும் மாணிக்கம் தாகூர் தனது சீண்டலை நிறுத்தவில்லை. இதையடுத்து, அவர் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடமே முறையிட்டார். இதையடுத்து காங்கிரஸ் தலைமை மாணிக்கம் தாகூரை அமைதிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மிகக் கடுமையாகப் பேசுகிறார். அவர் பேசும் வார்த்தைகள் எல்லாம் கூட்டணியில் நெருடலை ஏற்படுத்துவதுபோல் உள்ளது. நாங்களும் திருப்பி அடிப்போம் என்று அவர் பேசுவது, ராமநாதபுரத்தில் 2 பேர் சண்டைபோட்டுக் கொண்டால் எப்படி பேசுவார்களோ அதுபோல் பேசுகிறார். அதனை அக்கட்சியினரே கண்டித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி தொடங்கிய நாள் முதல் கலகக்குரல் எழுப்புவது அவர்களது வழக்கம். உட்கட்சி விவகாரத்தில் கதர் சட்டைகள் எல்லாம் கிழிக்கப்பட்டிருக்கும். இது ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் கட்சியினர் சொல்வதை எல்லாம் திமுக பொருட்படுத்தவில்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை. காங்கிரஸ்காரர்கள் ஒரே நேரத்தில் ஒன்பது குரல் கொடுப்பார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. " எனக் கூறியிருந்தார்.
வைகோவின் இந்த விமர்சனத்துக்கு பதில் அளித்துள்ள மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கூட்டணி குறித்து பேசக் கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்த்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்து போறேன். பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications