ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் இனி ஜீரோதான்.. அந்த 3 பேரை தவிர யாரும் வரலாம்.. ஜெயக்குமார்
ஓ பன்னீர் செல்வத்தின் அரசியல் எதிர்காலம் இனி ஜீரோதான் என்றும் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் தவிர யார் வந்தாலும் அதிமுகவில் ஏற்றுகொள்வோம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை: கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பினை வழங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படும் நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் இனி ஜீரோதான் என்றும், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனை தவிர வேறு யாரு வேண்டுமானாலும் வரலாம் என கூறினார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பினை வழங்கியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

பாண்டவர்களுக்கே வெற்றி..
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கவுரவர்களின் சூழ்ச்சி தோல்வியடைந்துள்ளது. கவுரவர்கள் எவ்வளவு சூழ்ச்சி வேலைகளை மேற்கொண்டிருந்த போதும் பாண்டவர்களே இறுதியில் வெற்றி பெற்றனர். தற்போது உச்சநீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. நாங்கள் சட்டப்படி சென்று கொண்டு இருக்கிறோம். எந்த சட்ட மீறலும் இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக உள்ளது.

அரசியலில் இனி ஜீரோ தான்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள். அதிமுக ஆட்சியின் போது இருந்த சூழல் இப்போது இல்லை. தற்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை. இதனை ஒவ்வொரு தொண்டனும் நினைத்து பார்க்கின்றனர். ஓ பன்னீர் செல்வத்தின் அரசியல் எதிர்காலம் இனி ஜீரோதான். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் இவர்களை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

3 பேரை தவிர மற்றவர்கள்..
அதிமுக உடையவில்லை. பிளவு இல்லை, சுணக்கம் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த அதே எழுச்சியுடன் தான் இப்போதும் அதிமுக இருக்கிறது. ஓபிஎஸ்சை எப்படி அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியும். தலைமைக்கழகத்தை எட்டி உதைத்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவரை தொண்டன் எப்படி ஏற்றுக்கொள்வான். கருணாநிதியை புகழ்வதை எப்படி ஏற்றுக்கொள்வான். திமுகவின் பி டீமாக இருப்பவரை எப்படி ஏற்றுக்கொள்வான். திரு ஓபிஎஸ் இல்லாத.. சசிகலா இல்லாத.. டிடிவி இல்லாத.. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் தமிழ்நாட்டை பொறுத்தவரை இனி நூறாண்டு காலம் தழைக்கும்.

அது ஒரு அட்டக்கத்தி
தர்ம யுத்தம் யாரை எதிர்த்து தொடரப்பட்டது.. சசிகலா குடும்பத்தை எதிர்த்து தான் போடப்பட்டது. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கு.. அதற்கு விடை கிடைக்க வேண்டும் என தொடரப்பட்டது. அவர் சொல்லித்தான் கமிஷன் போடப்பட்டது. பிறகு சசிகலாவை தனிப்பட்ட முறையில் பிடிக்கும்.. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்று கூறுவது எப்பட்டிப்பட்ட முரண்பட்ட விஷயம்.. இதனை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.. ஒரே மாதிரியாக கருத்து இருக்க வேண்டும்.. ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட நிறைய பேர் அண்ணன் எடப்பாடி அணியில் சேர்ந்து உள்ளனர். இவ்வாறாக அந்த குழுவில் இருந்து அனைவரும் எடப்பாடி தலைமையில் அதிமுகவில் இணைந்துவிடுவர்.. ஓபிஎஸ் அணியை கட்சி என்று கூறமுடியாது. அது ஒரு அட்டக்கத்தி.. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications