அரசியல் கட்சித் தலைவர்களுக்கு திடீர் ஞானோதயம்...! பேனர்கள் வேண்டாம் எனக் கட்டளை
Recommended Video
சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து நேற்று இளம்பெண் பலியாகிய நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் என தங்கள் கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளனர்.
தமிழக அரசியல் களத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தான் பேனர் கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது. அதற்கு முன்பு வரை சுவர் விளம்பரங்களை மட்டுமே காண முடியும். தலைவர்களை வரவேற்க பேனர்கள் வைக்கிறார்களோ இல்லையோ, தங்களை ஏரியாவில் யார் என்பதை காட்டிக்கொள்ள நிர்வாகிகள் பேனர் வைக்கத் தொடங்கினார்கள். அதில் போட்டி வேறு, பெரிய அளவில் ப்ளக்ஸ் வைத்தால் தான் தலைவர் கவனத்தை ஈர்க்க முடியுமென்று மனக்கோட்டையும் கட்டுவர்.

இந்நிலையில், திமுக, அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என்று இன்று அறிவுத்தியுள்ளனர். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே கட்சியினருக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் இன்றும் மீண்டும் நினைவூட்டியுள்ளார். அவரை தொடர்ந்து அதிமுக, பாமக, அமமுக சார்பாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பேனருக்கு அதிமுக தடை
அதிமுகவினர் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கோ, கட்சிக் கூட்டங்களுக்கோ பேனர்கள் வைப்பதை நிறுத்த வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் காரியத்தை செய்யக்கூடாது எனவும் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். கூட்டு அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ராமதாஸ் உத்தரவு
இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பதாகைகள் வைக்க வேண்டும் என பாமகவினர் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது எனக் கூறியுள்ளார். மேலும், பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் என்றும், பதாகைகள் தவிர்ப்போம், நாகரீகம் காப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் அறிவுறுத்தல்
சென்னையில் நேற்று நடைபெற்ற துயர நிகழ்வை அமமுகவினர் எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, பதாகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications