பொள்ளாச்சி பயங்கரம்.. அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண் பெயர்.. பயம் காட்டுகிறீர்களா? ஸ்டாலின் ஆவேசம்
சென்னை: பொள்ளாச்சி பலாத்கார வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை தமிழக அரசு தனது அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாக, திமுக தலைவர், மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பேஸ்புக்கில், ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் - விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்கிற உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் உள்ள நிலையில், பொள்ளாச்சி வன்கொடூரம் தொடர்பாக புகார் தந்த பெண்ணின் பெயர், கல்லூரி உள்ளிட்ட விவரங்களுடன் சி.பி.ஐ. விசாரணைக்கான அரசாணையை அ.தி.மு.க. அரசு வெளியிட்டிருக்கிறது.
இது அப்பட்டமான விதிமீறல் மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இனி புகார் தராமல் இருப்பதற்காக விடப்படும் மறைமுக அச்சுறுத்தலுமாகும்.
குற்றவாளிகளைக் காப்பாற்ற தனது கபட நாடகத்தைத் தொடர்கிறது ஆளுந்தரப்பு. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார். அரசாணை காப்பியையும், அதில் இணைத்துள்ள நிலையில், மாணவி பெயர், மாணவி படிக்கும் கல்லூரி பெயர்கள் அதில் கறுப்பு அடிக்கப்பட்டுள்ளது.