பொன்.மாணிக்கவேல் நேர்மையானவர் இல்லை.. மிதப்பில் திரிகிறார்.. அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பு
பொன்.மாணிக்கவேல் நேர்மையானவர் இல்லை.. அமைச்சர் சிவி சண்முகம் குற்றச்சாட்டு
சென்னை: பொன். மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி கிடையாது, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேட்டியளித்துள்ளார்.
தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன். மாணிக்கவேலுக்கும் இடையே கடுமையான பிரச்சனை நிலவி வருகிறது. இந்த பிரச்சனை நாளுக்கு நாள் முற்றி வருகிறது.
நேற்று முதல்நாள் பொன்மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 13 காவல் அதிகாரிகள் டிஜிபியிடம் புகார் அளித்தனர். அதிகாரிகளின் புகார்களுக்கு நேற்று பொன். மாணிக்கவேல் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் இன்று பொன். மாணிக்கவேல் மீது சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.
சிவி சண்முகம் பேட்டி
சிவி சண்முகம் அளித்த பேட்டியில், பொன். மாணிக்கவேலை நேர்மையான அதிகாரி என்று யார் கூறியது. நேர்மையான அதிகாரி என்றால் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சரியாக பதில் அளிக்க வேண்டும். பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்.
அனுமதி
குற்றச்சாட்டுகளை மேற்பார்வை செய்ய மட்டுமே பொன். மாணிக்கவேலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றச்சாட்டுகளை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று அவருக்கு அதிகாரம் இல்லை. அவரால் குற்றச்சாட்டுகளை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று ஆணையிட முடியாது.
விசாரணை வேண்டும்
பொன். மாணிக்கவேல் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும். யாராக இருந்தாலும் மனித உரிமை மீறல் என்றால் மனித உரிமை மீறல்தான். பொன். மாணிக்கவேல் தமது கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றுபவர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும். அதை முதலில் அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.
உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்
பொன். மாணிக்கவேல் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார். எத்தனை சிலைகளை இதுவரை பொன். மாணிக்கவேல் கண்டுபிடித்துள்ளார். அவர் எத்தனை வழக்கு இதுவரை பதிவு செய்துள்ளார். அதைத்தான் அவர் முதலில் விளக்க வேண்டும். பொன். மாணிக்கவேல் மீது நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளது.
ஹைகோர்ட் உத்தரவு
பொன். மாணிக்கவேல் சென்னை ஹைகோர்ட் உத்தரவு காரணமாக பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். உயர் அதிகாரி என்ற மிதப்பில், கோதாவில் பொன். மாணிக்கவேல் திரிகிறார். தனக்கு கீழ் வேலை பார்க்கும் அதிகாரிகளை கொடுமைப்படுத்தி மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறார், என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.