இப்போதான் மக்களுக்கு புரியுது.. இனி பாருங்க.. உறுதியாக சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: இழப்பு ஏற்படும்போதுதான், மக்களுக்கு சில விஷயங்கள் புரிகிறது எனவே, கன்னியாகுமரியில் பாஜக வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று அந்த தொகுதி லோக்சபா இடைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, கன்னியாகுமரி தொகுதியிலிருந்து பாஜக சார்பில் வென்றவர் பொன்.ராதாகிருஷ்ணன். மத்திய இணை அமைச்சர் பதவி வகித்தார். ஆனால் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரிடம், பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில்தான், கொரோனா காரணமாக வசந்தகுமார் இறந்ததால், ஏப்ரல் 6ம் தேதி, சட்டசபை தேர்தலோடு சேர்த்து, கன்னியாகுமரி தொகுதிக்கு, இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அனைவருக்கும் நன்றி
இதுபற்றி அவர் கூறுகையில், நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக பாஜக தலைவர் முருகன், பாஜக செயலாளர் சந்தோஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் புதிய ஒரு சரித்திரத்தை எழுத உள்ளார்கள் என்று நம்புகிறேன்.
பணியாற்றியுள்ளேன்
என்னுடைய மனச்சாட்சிக்கு துரோகம் செய்யாமல் இதுவரை பணியாற்றியுள்ளேன். மீண்டும் அதுபோல பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
பிரியங்கா காந்தி போட்டி
இந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் தரப்பிலிருந்து கூறப்படுகிறதே என்ற கேள்விக்ககு, கார்த்தி சிதம்பரத்துக்கு காங்கிரஸ் தலைமை மீது ஏதோ வன்மம் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு பெரிய வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றார்.
மக்கள் புரிந்து கொண்டார்கள்
இவ்வளவு நம்பிக்கையோடு பேசும் நீங்கள், 2019ல் நடந்ததை போல தோல்வியை தவிர்க்க முடியும் என நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, இழப்புக்கு பிறகுதான், மக்கள் சில விஷயங்களை புரிந்து கொள்வார்கள். மோடி அரசு செய்து வரும் நிறைய நன்மைகளை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.
எனவே, இந்த முறை வெற்றியை பரிசு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.