Pon Radhakrishnan: மோடிக்கு எதிராக ட்வீட் வெளியிட்டாரா பொன்.ராதாகிருஷ்ணன்? ஐயோ.. இது விஷயமே வேற
சென்னை: "மோடி அரசு, உள்ளடக்கிய மேம்பாட்டை எட்டவில்லை, ஒவ்வொரு தனி நபரின் நலன் முக்கியத்துவம் தரப்படாது. இதுதான் நியூ இந்தியா"
இவ்வாறு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் வெளியானதும், அதிர்ச்சியடைந்துவிட்டனர், பாஜகவினர்.
உடனடியாக தகவல்கள் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பறந்தன. இதையடுத்து அரை மணி நேரத்திற்குள், இந்த ட்வீட்டும் இதுபோன்று வெளியான மேலும் சில ட்வீட்டுகளும் அவசரமாக டெலிட் செய்யப்பட்டன.
டெலிட் செய்யப்பட்ட சில அதிரி புதிரி ட்வீட்டுகளை பாருங்கள்:
இன்று ஒவ்வொருவரும், கண்ணியம் இன்றி & நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறார்கள். இப்படி ஒரு ட்வீட். அடுத்ததாக இன்னும் மோசம். மோடி அரசில் நடுத்தர வர்க்கத்து மக்களுக்காக பணியாற்றுவது என்பது, குறைந்தபட்ச அஜென்டா. மோடி அரசு வெற்றிகரமாக தோல்வியடைந்துள்ளது. இப்படியெல்லாம் ட்வீட்டுகள் இருந்தன.
இதுபோன்ற ட்வீட்டுகள் எப்படி வெளியாகின? ஒருவேளை, பொன்.ராதாகிருஷ்ணன் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டுவிட்டதா? இப்படியெல்லாம் ஐயப்பாடுகள் எழுந்தன. இதுபற்றி விசாரித்தபோது, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருந்து, ட்வீட் செய்ய அனுப்பப்படும், தரவுகளில் யாரோ சிலர் வேண்டுமென்றே எடிட் செய்து மாற்றியுள்ளதாகவும், இதை படித்து பார்க்காமல் பொன்.ராதாகிருஷ்ணன் அக்கவுண்ட்டில் இருந்தும் ட்வீட் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தவறு தெரிந்ததும், அவை டெலிட் செய்யப்பட்டுள்ளன.
பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்றிருப்பதால், இந்த சம்பவம் குறித்து அவரது கருத்தை அறிய முடியவில்லை.