பொங்கல் பண்டிகை.. டாஸ்மாக்கில் மது விற்பனை படுஜோர்.. 4 நாட்களில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்களில் மட்டும் ரூ.850 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்று உள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 140 கோடி ரூபாய் அதிகம் ஆகும். நகர்புறங்களை விட கிராமப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில்தான் விற்பனை அதிக அளவில் நடைபெற்று இருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை படு ஜோராக நடைபெறும். பொங்கல் மற்றும் தீபாவளியை மதுப் பிரியர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள் என்பதால் டாஸ்மாக்கில் மதுபான விற்பனையானது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தவண்ணமே உள்ளது.

டாஸ்மாக் மது விற்பனை
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கடந்த 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. 5 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பொங்கலை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். வழக்கம் போல டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை படு வேகமாக நடந்துள்ளது.
கடந்த ஆண்டை விட ஒப்பிடும்போது இந்த ஆண்டு மது விற்பனை அதிகமாக நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த ஆண்டு பொங்கல் விடுமுறை நாட்களில் மட்டும் ரூ.850 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 140 கோடி ரூபாய் அதிகம் ஆகும்.
2 நாட்களில் ரூ.519 கோடிக்கு விற்பனை
போகி பண்டிகை மற்றும் பொங்கல் என இரண்டு நாட்களில் மட்டும் 519 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன. 16 ஆம் தேதி மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் விடாத குடிமகன்கள் 15 ஆம் தேதியே வாங்கி ஸ்டாக் வைத்தனர். இதனால், விற்பனை அன்றைய தினம் அசுர வேகத்தில் நடைபெற்றது.
காணும் பொங்கல் தினத்திலும் மதுவிற்பனை வழக்கம் போலவே அதிகமாக இருந்தது. நகரங்களை விட கிராமப்புறங்களில் மது விற்பனை அதிக அளவு இருந்தது. பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் பலரும் சொந்த ஊர் சென்றதால், கிராமங்களில் உள்ள மதுக்கடைகளில் இரவு வரை மது விற்பனை களை கட்டியது.
நேற்று பொங்கல் விடுமுறை முடிந்து அனைவரும் பணிக்கு திரும்பத் தயாரானதால், மது விற்பனை குறைந்துள்ளது. இப்படியாக கடந்த 4 நாட்களில் ரூ.850 கோடி மது விற்பனை நடைபெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications