3ஆவது வரிசைக்கு போன பொன்முடி, செந்தில் பாலாஜி சீட்.. சட்டப்பேரவையில் இருக்கை மாற்றம்!
சென்னை: பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் அவர்கள் இருவரின் இருக்கைகளும் மாற்றப்பட்டுள்ளன.
பொன்முடியின் இருக்கை சட்டப்பேரவையின் 1 ஆம் வரிசையிலிருந்து 3ஆவது வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் இருக்கை 2 ஆவது வரிசையில் இருந்து மூன்றாவது வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2024 செப்டம்பர் 26-ம் தேதி அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஒருநாள் இடைவெளியில் அவர் மீண்டும் அவர் அமைச்சரானார்.
இதுகுறித்து கடும் விமர்சனங்களை தெரிவித்த உச்ச நீதிமன்றம், ''ஜாமீன் வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை செந்தில் பாலாஜி ஏப்ரல் 28-ம் தேதிக்குள் (இன்று) முடிவு செய்து பதில் அளிக்க வேண்டும்'' என்று கெடு விதித்தது.இதேபோல, சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்தார். தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்துக்கு சென்று, தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதால், அவர் மீண்டும் அமைச்சரானார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை அன்பகத்தில் கடந்த 7-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன்முடி, சைவம், வைணவம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அமைச்சர் பதவியில் இருந்தும் அவரை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்த விவகாரத்தில், அவர் மீது வழக்கு பதிவு செய்யவும், இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில், அமைச்சரவையில் இருந்து இருவரும் நீக்கப்படுவார்கள் என்று பேசப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் பதவியை பொன்முடி, செந்தில் பாலாஜி இருவரும் நேற்று ராஜினாமா செய்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டது.
இந்நிலையில், அமைச்சரவை முதல் வரிசையில் இருந்து பொன்முடி பெயரும், 2வது வரிசையில் இருந்து செந்தில் பாலாஜி பெயரும் நீக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் 3-வது வரிசையான முன்னாள் அமைச்சர்கள் இருக்கையில் அமருவார்கள். புதிதாக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மனோ தங்கராஜ் இன்று மாலை அமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கிறார். அதன் பிறகே, அமைச்சர்கள் இருக்கை வரிசையில் அவரது பெயர் இடம்பெறும்.












Click it and Unblock the Notifications