என்னது விஜய் ஒரு பொருட்டே இல்லையா? சொன்னது யார் தெரியுமா? இவர் ஏன் வேற ரூட்ல போறார்?
சென்னை: சீமானும் விஜய்யும் அதிமுகவைப் பொறுத்தவரைப் பொருட்டே இல்லை என்றும் ஆகவே அவர்கள் இருவரையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே தேவையில்லை என்று அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன் பேசிய பேச்சு பல சர்ச்சைகள் கிளம்பும்படி அமைந்துள்ளது. இது அதிமுகவில் இரண்டுவிதமான போக்கு உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த போது நேரடியாக அவரை வாழ்த்தி எந்த அரசியல் தலைவர்களும் அறிக்கைவிடவில்லை. அல்லது ஆதரித்து பெரிய அளவில் கருத்துகூட சொல்லவில்லை. விஜய் தனது கட்சி தொடங்கும் போது 2024 மக்களவைத் தேர்தலில் தவெக போட்டியிடாது என்று கூறியிருந்தார். இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கப்போகும் உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக போட்டியிடாது என்றும் 2026 தான் தங்களின் இலக்கு என்றும் விளக்கம் அளித்து சமீபத்தில் கூட அறிக்கை வெளியானது.

ஆகவே, அவர் 2026இல் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், விஜய் தனித்துத்தான் போட்டியிடுவார் என்று பத்திரிகையாளர்கள் சிலர் கருத்து கூறி வருகின்றனர். ஆனால், தவெக தரப்பில் அதிமுக மீது பெரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பங்களைப் போய் சந்திக்கச் சென்ற விஜய், மறைமுகமாக திமுக ஆட்சியைக் கதிகலங்க வைத்துள்ளார் எனச் சிலர் பேசி வருகின்றன. அவர் இதற்கு முன்பாக அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பல துயர சம்பவங்கள் போது கூட சென்றுள்ளார். அப்போது அவர் நடிகராக மட்டுமே இருந்ததால் வெளி உலகத்திற்கு அந்த செய்தி அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை.
இப்போது ஒரு கட்சியின் தலைவராக அவர் மூடி மறைக்காமல் வெளிப்படையாகப் பாதிக்கப்பட்ட தரப்பினரைப் போய் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். ஆனால், தவெக சார்பாக அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் ஊடக விவாதங்களில் பேசும் போது திமுகவை டார்கெட் செய்துதான் தங்களின் கட்சி அரசியல் செய்து வருவதாகப் பேசி இருந்தார். அது எந்தளவுக்கு விஜய்யின் குரலாக உள்ளது என்பது விளக்கப்படவில்லை. விஜய் எப்போது அரசியல் கட்சியைத் தொடங்கினாரோ அப்போது முதல் அவர், அனைத்து தரப்பு தலைவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிவருகிறார். திருமாவளவன் பிறந்தநாளுக்கு அவர் வாழ்த்து செய்து வெளியிட்டார். அதுபோல சீமான் பிறந்தநாளுக்குக் கூட வாழ்த்து சொன்னார். அதிமுக பொதுச்செயலாளர் கடந்த மே மாதம் 70ஆவது பிறந்தநாள் கொண்டாடிய போது எந்த எக்ஸ்ட்ரா பிட்டுகளையும் சேர்க்காமல் வெறுமனே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து என்று கூறியிருந்தார்.

இந்நிலையில்தான் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய விஜய்க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது எக்ஸ் தளத்தில், "தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் விஜய் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய் அவர்கள், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன்" என்று கூறியிருந்தார்.
அவரது வாழ்த்து செய்தியை 1.2 மில்லியன் பார்வையாளர்களைப் போய்ச் சேர்ந்துள்ளது. விஜய் கட்சித் தொடங்கிய போது அமைதி காத்த எடப்பாடி பழனிசாமி, இப்போது பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய் பல்லாண்டு வாழ வேண்டும் என்றும் மக்கள் சேவை புரிய வேண்டும் என்று தனது விருப்பத்தை முன்வைத்துள்ளார். சில மாதங்கள் முன்னதாக வாழ்த்து செய்து வெளியிட்ட விஜய், எதிர்க்கட்சித் தலைவர் என்று மட்டுமே சொல்லி இருந்தார். ஆக, 2026 தேர்தலை மனதில் வைத்தே எடப்பாடி பழனிசாமி பொதுவாழ்வில் சேவை செய்ய விஜய்யை அழைத்துள்ளார். அது கூட்டணியாக மாறுமா என்பது காலம் தான் விடை தர வேண்டும். ஆனால், பொதுச்செயலாளர் விஜய்யை வாழ்த்து வரவேற்று வலை வீசி வரும்போது அதே கட்சிக்குள் உள்ள மூத்த தலைவர் பொன்னையன் விஜய் ஒரு பொருட்டே இல்லை என்கிறார்.
நாம் தமிழர் கட்சி, விஜய் கட்சி எல்லாம் சின்னக் கட்சி என்று கூறியுள்ளார். அப்படிப் பார்த்தால் பாஜக கூட ஒரு காலத்தில் சின்ன கட்சி தான் . இன்று அதிமுகவை டெபாசிட் இழக்க வைக்கும் அளவுக்கு வாக்குசதவீத்தை பெற்றுள்ள கட்சியாக மாறி இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் விஜய்யை மிக எளிமையாக எடைபோட்டுப் பேசியுள்ளார் பொன்னையன். இவரது பொதுச்செயலாளர் விட்ட ஒரு வாழ்த்துக்கே 1 மில்லியனை கடந்து பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். இதை அரசியல் கணக்கு எல்லாம் புரியாமல் எடப்பாடியை உயர்த்திப் பேசுவதாக நினைத்து விஜய்யை மட்டம் தட்டி இருக்கிறார் பொன்னையன்.

விஜய் மற்றும் சீமான் கூட்டணி குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ள பொன்னையன், "திமுக ஆட்சியில் 2 ஆயிரம் அம்மா மருந்துக் கடைகள் மூடப்பட்டுவிட்டன. அம்மா உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன. ஆளும் கட்சியான திமுக பணபலத்தை வைத்து 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே, அதிமுகவுக்கு இது சரிவே இல்லை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை என்ற பெயரில் பல கோடி ரூபாய்களைச் செலவு செய்துள்ளார். பார்க்கும் மக்களுக்கு எல்லாம் 500 ரூபாய் கொடுத்துள்ளார். அவர்களிடம் திமுக அடுத்தபடியாக பணம் இருக்கிறது. அதை வைத்து வாக்குகளைப் பெற்றுள்ளார்கள்.
ஆகவே, அதிமுக ஒன்றும் சரிவைச் சந்திக்கவில்லை. நாங்கள் பல மாவட்டங்களில் பலமாக இருக்கிறோம். கொங்கு மண்டலத்தில் மட்டுமே கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று இருப்பதை வைத்து அதற்குச் சாதிய சாயம் பூசப்பார்க்கிறார்கள். அது எடுபடாது. சசிகலா அதிமுக காட்சி ஆதிக்கம் உள்ளதாகச் சொல்லி இருப்பதைக் கேட்டால் அவருக்கு அரசியல் அறிவே இல்லையோ என்று மக்கள் நினைக்கும்படி உள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா ஒரு செல்லாக் காசு. அவர் அதிமுகவை ஒருங்கிணைப்பார் என்று சொல்வது எல்லாம் நடக்காத காரியம். அது என்றைக்குமே நடக்காது.
அதிமுகவுக்குப் போட்டி பாஜக இல்லை. அதேபோல் சீமான் தனக்கான ஒரு வாக்கு வங்கியை வைத்துள்ளார். அது சின்ன அளவில் உள்ள கட்சி. அதனுடன் அதிமுகவை ஒப்பிடுவது தவறு. சீமான் விஜய்யுடன் சேர்ந்தாலும் எங்களுக்குப் பாதிப்பு இல்லை. அவர்கள் இருவரும் பொருட்டே இல்லை. வருன்கிற 2026இல் எடப்பாடி பழனிசாமி கட்டாயம் வெற்றி பெறுவார். அது காலத்தின் கட்டாயம்" என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications