சூப்பர் தகவல்.. சென்னையில் இந்த ஒரு மண்டலத்தில் மட்டும் கொரோனா இல்லை
சென்னை: சென்னை நகரத்தில்தான் தமிழகத்தில், அதிகபட்சமாக 358 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அங்கேயும், ஒரு மண்டலத்தில் மட்டும், ஒரு நோயாளி கூட கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சியான தகவல்.
Recommended Video
சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிதாக, சென்னை மாநகராட்சியில் அம்பத்தூர் மண்டலத்துக்கும் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்த மண்டலம் பாதிக்கப்படாத பகுதியில் இருந்தது.
ராயபுரம் அதிகம்
ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 116, தண்டையார்பேட்டை 46, திருவிக நகர் 42, தேனாம்பேட்டை 42, கோடம்பாக்கம் 35, அண்ணாநகர் 27, திருவொற்றியூர் 12, வளசரவாக்கம் 9, பெருங்குடி 8, அடையாறு 7, ஆலந்தூர் 7, மாதவரம் 3, சோழிங்கநல்லூர் 2 இவ்வாறு மண்டலவாரியாக பாதிப்பு இருக்கிறது.
மணலி மண்டலம்
நல்ல விஷயம் என்னவென்றால், சென்னையின் வடக்கு எல்லையில் உள்ள, மணலி மண்டலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில், இங்கு யாருக்கும் நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை.
வீடுகள் எண்ணிக்கை
சென்னையில் மொத்தம் 16 லட்சத்து 82 ஆயிரத்து 91 வீடுகள் உள்ளன., அதிகபட்சமாக திருவிக நகர் மண்டலத்தில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 569 வீடுகளும், குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 23 ஆயிரத்து 178 வீடுகளும் உள்ளன. மணலி மண்டலம் வடக்கு புறமாக ஒதுங்கியுள்ளது. பிற பகுதிகளில் இருந்து இதன் வழியாக பயணித்து வெளியே செல்ல வேண்டிய அவசியம் பலருக்கும் கிடையாது.
காரணம் என்ன?
பிற மண்டலங்களோடு ஒப்பிட்டால், வீடுகள் எண்ணிக்கையும் குறைவு. இதுவும் மணலியில், கொரோனா பரவாமல் தடுக்கப்பட முக்கிய காரணமாக இருக்க கூடும் என்று தெரிகிறது. எனவேதான், திருவொற்றியூர், தண்டையாார் பேட்டை போன்ற பகுதிகள் அடுத்தடுத்து இருந்தும், அங்குள்ள பாதிப்பு விகிதத்திற்கும், மணலிக்கும் தொடர்பு இல்லாத நிலை உள்ளது.