விஜயகாந்த் வீட்டு முன்பு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு.. பரபரப்பில் விருகம்பாக்கம்
சென்னை: விஜயகாந்த் வீட்டு முன்பாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழித்து எரியப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
பொது இடங்களில் உள்ள அரசியல் தலைவர்கள் போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
போஸ்டர்கள்
இந்தநிலையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டின் முன்பாக ஒட்டப்பட்ட போஸ்டர்களை கூட விட்டுவைக்காமல் கிழித்து விட்டனர். இதனால் தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒற்றை இலக்கம்
தேமுதிக, அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் இழுபறி நிலை நீடித்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில்தான் சீட்டுகளை வழங்க அதிமுக தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
கூட்டணி இழுபறி
அதேநேரம், தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு ஈடாக, அதாவது 23 தொகுதிகள் அல்லது அதற்கு மேல் ஒதுக்க வேண்டும் என்று, தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இந்த விஷயத்தில் ஒரு முடிவு எட்டப்படவில்லை.
தொண்டர்கள் குவிந்தனர்
இதன் காரணமாக தேமுதிக தொண்டர்கள் விருகம்பாக்கத்தில் விஜயகாந்த் வீட்டு முன்பாக குவிந்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் இந்த போஸ்டர் அகற்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.