இனி மின்வெட்டு இருக்காது? தமிழகத்தில் குறைந்த மின்தேவை! கோடை மழையால் வந்த குட்நியூஸ்
சென்னை: கோடை மழையின் காரணமாக தமிழகத்துக்கான மின்தேவை என்பது மளமளவென சரிந்துள்ளது. இதனால் கோடையில் ஏற்படும் மின்வெட்டு இல்லாமல் போகலாம்.
தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. அதோடு கடந்த ஏப்ரல் மாதம் வெப்பஅலையுடன் சேர்ந்து வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இதற்கிடையே தான் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது. மார்ச், ஏப்ரல் மாதத்தின் வெயிலை மக்களை அவதியடைய வைத்த நிலையில் கத்திரி வெயிலை நினைத்து மக்கள் பெரிதும் கவலைப்பட்டனர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக தமிழகம் கத்திரி வெயில் காலத்தில் இருந்து தப்பித்துள்ளது. கத்திரி வெயில் காலம் வரும் 28 ம் தேதி வரை நீடிக்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் மறைந்து கோடை மழை பெய்ய தொடங்கி உள்ளது. இது மக்களை நிம்மதியடைய செய்துள்ளது. மேலும் நேற்று முன்தினம் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில நாட்களும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இத்தகைய சூழலில் தான் தற்போது இன்னொரு குட்நியூஸ் வந்துள்ளது. அதாவது தமிழகத்தில் மின்நுகர்வு என்பது மளமளவென சரிந்துள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் அதிகப்படியான வெயில் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் ஃபேன், ஏசி உள்ளிட்டவற்றை அதிகமாக பயன்படுத்த தொடங்கினர். இதனால் தமிழகத்தில் ஒரு நாளுக்கான மின்நுகர்வு என்பது 40 கோடி யூனிட்டை தாண்டியது.
குறிப்பாக மார்ச் 20ம் தேதி மட்டும் தமிழகத்துக்கான மின்நுகர்வு என்பது புதிய உச்சம் தொட்டது. மார்ச் 20ல் மட்டும் தமிழகத்தில் 42.37 கோடி யூனிட் வரை பொதுமக்கள் பயன்படுத்தி உள்ளனர். இதனால் அன்றைய தினம் மட்டும் தமிழகத்தில் 19,387 மெகாவாட் மின்சாரம் தேவையாக இருந்தது. அதன்பிறகும் கூட தமிழகத்தில் மின்தேவை என்பது 40 கோடி யூனிட்டுக்கு குறையாமல் நீடித்து வந்தது.
இத்தகைய சூழலில் தான் தற்போது கோடை மழை பெய்ய தொடங்கி உள்ளது. இந்த மழையின் காரணமாக தமிழகத்துக்கான மின்நுகர்வு என்பது சுமார் 2 கோடி யூனிட் வரை குறைந்துள்ளது. அதாவது நேற்று முன்தினம் தமிழகத்துக்கான மின்நுகர்வு என்பது 39 கோடி யூனிட்டாக மட்டுமே இருந்தது. பொதுவாக சராசரியாக 41 கோடி யூனிட் வரை மின்நுகர்வு பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது 2 கோடி யூனிட் வரை சரிந்துள்ளது. அதோடு நேற்று முன்தினம் தமிழகத்துக்கான மின்தேவை என்பது 17,331 மெகாவாட்டாக மட்டுமே இருந்தது.
அதாவது கோடை மழையால் பொதுமக்கள் ஏசி, ஃபேன் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதை குறைத்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். இது உண்மையில் நல்ல செய்தியாகும். ஏனென்றால் தமிழகத்தில் தொடர்ந்து மின்நுகர்வு என்பது அதிகரிக்கும் பட்சத்தில் மின்தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மின்தடை ஏற்படும்போது பொதுமக்கள் அரசை குறை கூறலாம். ஆனால் மின்நுகர்வு சரியும் பட்சத்தில் மின்தடை ஏற்படாமல் இருக்கலாம். அந்த வகையில் கோடை மழையால் தமிழகத்துக்கான மின்நுகர்வு சரிந்து இருப்பது மக்களுக்கும், அரசுக்கும் நல்ல செய்தியாக பார்க்கப்படகிறது.












Click it and Unblock the Notifications