திடீர் மின்தடை.. இருளில் மூழ்கிய சென்னை! என்ன காரணம்? எப்போது மின்சாரம் சீராகும்?
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, மந்தைவெளி, சூளைமேடு, வண்ணாரப்பேட்டை, மாதவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டுள்ளது.
இன்று இரவு 10 மணி அளவில் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைபட்டது. இதன் காரணமாக சென்னை நகரமே இருளில் மூழ்கி உள்ளது. மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை உட்பட பல பகுதிகளிலும் மின்சாரம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடைபட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, மந்தைவெளி, சூளைமேடு, வண்ணாரப்பேட்டை, மாதவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டுள்ளது.
மழையோ, பலத்த காற்றோ இல்லாத நிலையில் திடீரென சென்னை நகரமே இருளில் மூழ்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மின் வாரிய புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் அளிக்க முடியாமல் தவித்தனர். இந்நிலையில், மின் துண்டிப்புக்கான காரணம் தெரியவந்துள்ளது.
மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணலியில் 400 கிலோ வாட் திறன் கொண்ட முக்கிய யூனிட்டில் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மின்சார விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றி மீண்டும் மின் விநியோகம் வழங்குவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில், அதாவது அடுத்த 30 நிமிடங்களுக்குள் சென்னையில் மின் விநியோகம் சீராகும் என தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications