ஜெசிகா தீபாவை நான் காதலிக்கலையே..போலீஸ் விசாரணையில் இயக்குநர் சிராஜூதீன் மழுப்பல்..அப்போ ஐபோன்?
சென்னை: நடிகை ஜெசிகா தீபாவை தான் காதலிக்கவே இல்லை என்று இயக்குநர் சிராஜூதீன் கூறியுள்ளார். நடிகை பவுலின் ஜெசிகா தீபா தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில் பல கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களையே சிராஜூதீன் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை பவுலின் ஜெசிகா என்கிற தீபா. 29 வயதாகும் இவர் வாய்தா, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். வாய்தாவில் கதாநாயகியாகவும் வேறு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்திருந்தார்.
சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார் பவுலின் தீபா. இவர் கடந்த சில ஆண்டுகளாக சிராஜுதீன் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி நடிகை தீபா தனது வீட்டில் கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நைஸா தீபா வீட்டில் நுழைந்த 'நாகராஜ்'.. டக்கென கண்விழித்த கணவர்.. அதுவும் கோழிகூண்டிற்குள்.. ட்விஸ்ட்
நடிகை பவுலின் தீபா தற்கொலை
தீபா தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார். அதில் தான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாகவும் அந்த காதலை அந்த நபர் ஏற்கவில்லை என்றும் தனது மரணத்திற்கும் யாரும் காரணமில்லை எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக தீபாவின் சகோதரர் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீபாவின் செல்போன் தகவல்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் அவரது காதலன் சிராஜுதீனிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் படப்பிடிப்பில் இருப்பதால் ஆஜராக நேரம் கேட்டிருந்தார்.
சந்தேக வளையத்தில் சிராஜூதீன்
தற்கொலைக்கு முன்பாக சிராஜூதீனிடம் தீபா போனில் வாக்குவாதம் செய்ததாகவும் தான் தற்கொலை செய்ய போவதாகவும் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பவுலின் காதலித்து வந்ததாக சொல்லப்படும் சிராஜுதீனுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்த விவகாரத்தில் சிராஜுதீனின் நண்பர் பிரபாகரன் மீதும் காவல்துறையினரின் சந்தேக பார்வை விழுந்துள்ளது. பவுலின் தற்கொலை செய்து கொண்டதை சிராஜுதீன் மூலம் அறிந்த அவரது நண்பர் பிரபாகரன் பவுலினின் வீட்டிற்கு பதற்றமாக ஓடி வரும் சிசிடிவி காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
தடய அறிவில் சோதனை
இதனிடையே தற்கொலை செய்துகொண்ட நடிகை பவுலின் தீபாவின் காணாமல் போன ஐபோன் பிரபாகரனிடம் இருந்து மீட்கப்பட்டது. மொத்தமாக நடிகை பவுலின் தீபா பயன்படுத்திய 3 செல்போன்கள் ஒரு டேப் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். செல்போனில் உள்ள தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய தடவியல்துறைக்கு ஐபோனை அனுப்ப திட்டமிட்டுள்ளனர். பவுலின் தற்கொலை தொடர்பாக பிரபாகரனிடம் கோயம்பேடு போலீஸ் 3 மணிநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிராஜூதீனிடம் விசாரணை
இந்நிலையில், நடிகையின் காதலன் என்று கூறப்படும் தயாரிப்பாளரும் இயக்குனருமான சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிராஜூதீனிடம் போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். சுமார் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டனர். மேலும் அவரின் பதிலை எழுத்துப்பூர்வமாக போலீசார் பதிவு செய்தனர். போலீஸ் விசாரணையில் பல கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களையே அளித்தாராம் சிராஜூதீன்.
ஒருதலைக்காதல்
நடிகை தீபாவை தனக்கு கடந்த 5 மாதமாகத்தான் தெரியும் என்றும், தான் அவரை காதலிக்கவில்லை. ஆனால் அவர் தன்னை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்தார் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். நடிகையை காதலிக்கவில்லை என்றால் ஏன் ஐபோன் வாங்கி கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு, 'நான் ஐபோன் வாங்கி கொடுக்கவில்லை. அது ஜெசிக்காவின் ஐபோன் தான் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். பிரபாகரன் மூலமாக ஐபோனை எடுத்து வரசொன்னது ஏன் என்று கேட்டதற்கு, அவர் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். ஆனால், பிரபாகரன் இருவரும் காதலித்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
முரண்பட்ட தகவல்கள்
நடிகைக்கு கை, கால்களில் தோல் தொடர்பான பிரச்னை இருந்ததாகவும், அவரது தோழி பல் மருத்துவர் நித்தியா என்பவர் மூலமாக தனியார் மருத்துவமனையில் அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மன உளைச்சலுக்கு பவுலின் தள்ளப்பட்டதாகவும் இதற்காக டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று வந்ததாகவும் தெரிவித்தாராம் சிராஜூதீன். நடிகை தற்கொலை சம்பந்தமாக தயாரிப்பாளரும் இயக்குனருமான சிராஜூதீன் தொடர்ந்து முரண்பட்ட தகவல்களை தெரிவித்து வருவதால் உண்மையை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.