இனிமேல் தான் சூப்பர் சீன் இருக்கு.. நாடாளுமன்றத்தில் பிரவீன் சக்ரவர்த்தி செய்ய போகும் சம்பவம்
சென்னை: சட்டமன்ற தேர்தல் தோல்வி தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளன. தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள் ஒதுக்கப்பட்டனர். ஒரு மாநிலங்களவை சீட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பிரவீன் சக்ரவர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு ராஜ்யசபா எம்பி ஆகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தமிழகத்தின் உரிமைக்காக என்ன செய்ய போகிறார் என்பது குறித்து பிரவீன் சக்ரவர்த்தி பட்டியலிட்டார்.
ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரவீன் சக்ரவர்த்தி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவெக - காங்கிரஸின் முதல் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு முதல்வர் ஜோசப் விஜய், தவெக தலைவர்கள், தொண்டர்கள் அனைருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பிகள், தொண்டர்கள் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜகவின் சதி
நாடாளுமன்றத்திற்கு இது முக்கியமான காலகட்டம். மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியும். மேற்கு வங்கத்தில், பஞ்சாப்பில் என்ன நடக்கிறது என்பதை பாரக்கிறோம். ஒவ்வொரு கட்சியாக உடைத்து, மெஜாரிட்டியை எடுத்து பாஜக நினைக்கிறது. இதன் மூலம் ஒரே நாடு, ஒரே தேர்தல், தொகுதி வரையறை மசோதாக்களை திணித்து செயல்படுத்த பார்க்கிறார்கள். மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதற்கு மோடி அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை தடுக்க பார்க்கிறோம்.
நாடாளுமன்றத்திற்கு தமிழ்நாட்டிற்கு துணிச்சலான, புரிதலான குரல் ஓங்க வேண்டும். அந்த குரலாக நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் உரிமை குரலாக நான் ஒலிப்பேன்.
கர்நாடக காங்கிரஸ் அரசின் மேகதாது அணை திட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எதிர்ப்பு. தமிழக மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை நாங்கள் எந்த வகையிலும் ஏற்க மாட்டோம். கர்நாடகாவில் எந்த ஆட்சி நடைபெற்றாலும் மக்களின் பக்கம் தான் நிற்போம். இதில் எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications