கண்ணாடி பெட்டியில் விஜயகாந்த்.. அப்பா வாங்கனு கதறிய மகன்கள்.. கட்டி அணைத்த பிரேமலதா
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் கட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்தவுடன் தனது மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோரை கட்டி பிடித்து கதறி அழுதார் பிரேமலதா.
விஜயகாந்த் 1980களில் ஒரே ஆண்டில் நிறைய படங்களில் நடித்து ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பார். அப்போது அவர் வீட்டில் இருந்தார் என்றால் அவருடைய இரு மகன்களான விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோருடன் நேரத்தை செலவிடுவாராம். அவர்களுக்கு நிறைய கற்றுக் கொடுப்பாராம்.

அந்த வகையில் விஜயகாந்த் தனது மகன்களுக்கு நிஜ ஹீரோவாகவே இருந்தார். மகன்களும் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது அவரை நன்றாக பார்த்துக் கொண்டனர். வெளிநாடுகளுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது, கட்சி பணிகளில் தாய்க்கு உதவியாக இருந்தது என இருந்து வந்தனர்.
இந்த நிலையில் விஜயகாந்துக்கு எப்போதெல்லாம் உடல்நலம் பாதிக்கப்படுமோ அப்போதெல்லாம் தொண்டர்களுக்கு தைரியம் சொன்னார்களே தவிர அவர்கள் உள்ளுக்குள் அழுதுக் கொண்டே இருந்தார்கள். அது அவர்களின் முகத்தை பார்த்தாலே தெரியும். இந்த நிலையில் விஜயகாந்த் மீண்டும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நிமோனியா இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் மூச்சுத்திணறிய விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் கொடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் காலமானார். இதையடுத்து அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்த போது அவருடைய உடல் மீது கண்ணாடி பேழை வைக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பிரேமலதா அவருடைய கன்னங்களை வருடியபடியே கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். உடல் வீட்டை அடைந்ததும் தொண்டர்கள் கதறினர். ஆம்புலன்ஸில் இருந்து இறங்கிய பிரேமலதா தொண்டர்களை பார்த்ததும் துக்கம் தாளாமல் உடைந்து அழுதார்.
இதையடுத்து விஜயகாந்தின் விருப்ப இடமான கட்சி அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆம்புலன்ஸில் பிரேமலதா, சுதீஷின் மனைவி ஆகியோர் வந்தனர். வரும் வழியெல்லாம் விஜயகாந்தின் முகத்தை பார்த்து பார்த்து பிரேமலதா கண்ணீர் விட்டபடியே இருந்தார்.
இந்த ஊர்வலத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு முன்பு விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும் தொண்டர்களுடன் வருகை தந்தனர். இருவரும் சோகமான முகத்துடன் இருந்தனர். இதையடுத்து விஜயகாந்தின் உடல் கட்சி அலுவலகத்தை வந்தடைந்ததும் தொண்டர்கள் கேப்டன் கேப்டன் என கதறினர்.
வழக்கமாக விஜயகாந்த் கட்சி அலுவலகத்திற்கு வந்தால் அவருடைய பாடல்கள் ஒலிக்கும். ஆனால் இன்று ஆம்புலன்ஸில் விஜயகாந்தின் உடல் வந்த போது அழுகுரல்கள் கேட்டன. இதையடுத்து அங்கு விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்ட போது ஐஸ் பெட்டியை தூக்கி விஜயகாந்தின் தலைக்கு மஞ்சள் நிறத்தில் தலையணை வைக்கப்பட்டது.
அப்போது தந்தையின் உடலை கண்டு சண்முக பாண்டியனும் விஜய பிரபாகரனும் கதறி அழுதனர். அவர்கள் இருவரும் தாய் பிரேமலதாவை பார்த்ததும் மேலும் அழத் தொடங்கினர். உடனே பிரேமலதா தனது மகன்களை கட்டி அணைத்தபடியே கதறி அழுதார். அவர்களும் அப்பா அப்பா எழுந்து வாங்கப்பா என அழுதனர்.












Click it and Unblock the Notifications