பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள்
சென்னை: பிரேமலதா எடுத்த முடிவு ஒன்று திமுக தரப்பில் உள்ள தொண்டர்கள் பலர் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளதாம்.
பிரேமலதா கொஞ்சம் சீட்டு அதிகமாக கேட்பாங்க.. ஆனால் அவங்க பிரச்சாரத்திற்கு வந்தா மாஸ்ஸா இருக்கும்.. என்று தி.மு.க தரப்பில் போடப்பட்ட கணக்குகள் இப்போது தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளன. தே.மு.தி.க-வின் தேர்தல் பிரசாரப் பயணப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். ஆனால், அந்தப் பட்டியல் வெளியான நொடியிலிருந்து அறிவாலய வட்டாரத்தில் மெல்லிய சலசலப்பு எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ளது.

தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல்
1) விருதாச்சலம் - பிரேமலதா விஜயகாந்த்
2) விருதுநகர் - விஜயபிராபகரன்
3) தர்மபுரி - டாக்டர் இளங்கோவன்
4)குடியாத்தம் ( தனி ) - பிரதாப்
5)சேலம் மேற்கு - அழகாபுரம் மோகன்ராஜ்
6) போளூர் - சரவணன்
7)பல்லாவரம் - அனகை முருகேசன்
8)திருத்தணி - D.கிருஷ்ணமூர்த்தி
9)ஓமலூர் - A.R.இளங்கோவன்
10)மைலம் - எல்.வெங்கடேஷன்
ஏன் இந்த அப்செட்?
தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்தபோது, உடன்பிறப்புகள் மத்தியிலும் தலைமைப் பீடத்திலும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தமிழகத்தில் ஒரு வலுவான பெண் அரசியல் குரலாக பிரேமலதா அறியப்படுபவர். அதிலும் கேப்டனின் பாணியிலேயே ஆவேசமாகவும், நேரடியாகவும் பேசக்கூடியவர். எனவே, மாநிலம் முழுக்க அவர் சுழன்று பிரசாரம் செய்தால், அது ஒட்டுமொத்தக் கூட்டணிக்கும் ஒரு கூடுதல் 'மைலேஜ்' தரும் என்று கணக்கு போடப்பட்டது.
ஆனால், பிரேமலதா வெளியிட்டுள்ள பிரசார அட்டவணை, தே.மு.தி.க வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலே லிஸ்டில் உள்ள தொகுதிகளில்தான் அவர் மொத்தமாக பிரச்சாரம் செய்ய போகிறாராம், "தனது கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற வைப்பது ஒரு தலைவராக அவரது கடமைதான். ஆனால், கூட்டணி தர்மத்தின்படி மற்ற தொகுதிகளுக்கும் அவர் சென்றிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, 'எங்கள் வேட்பாளர்கள் மட்டும் போதும்' என்கிற மனநிலையில் அவர் இருப்பது வருத்தமளிக்கிறது" என்கிறார்கள் களத்தில் இருக்கும் தி.மு.க நிர்வாகிகள்.
மறக்கப்பட்ட 'உரிமை'க் குரல்?
குறிப்பாக, தென் மாவட்டங்களிலும் கொங்கு மண்டலத்திலும் பிரேமலதாவின் பேச்சுக்குத் தனி மவுசு உண்டு. அந்தப் பகுதிகளில் இருக்கும் தி.மு.க மற்றும் இதர கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள், "அண்ணி ஒரு ரவுண்டு வந்தா ஓட்டு அப்படியே விழும்..." என்று ஆவலாகக் காத்திருந்தனர். ஆனால், அவர் தே.மு.தி.க களம் காணும் இடங்களை மட்டுமே குறிவைத்திருப்பது, "அப்படியென்றால் மற்ற தொகுதிகளில் எங்களுக்காக யார் பேசுவார்கள்?" என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
பின்னணி என்ன?
அதேநேரம் தே.மு.தி.க தரப்பிலோ வேறு மாதிரியான பேச்சு ஓடுகிறது. "எங்கள் தலைவிக்குச் சில உடல்நலக் குறைபாடுகள் மற்றும் நேர நெருக்கடிகள் உள்ளன. இருக்கும் சொற்ப நாட்களில் எங்களது வேட்பாளர்களைக் கரைசேர்ப்பதே பெரும் சவாலாக இருக்கிறது. அதனால்தான் இந்தத் திட்டம். இதில் கூட்டணி அதிருப்திக்கு இடமே இல்லை" என்கிறார்கள் நிதானமாக.
இருப்பினும், "எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாகத் தாக்கும்போது, ஒரு பெண் சிங்கமாக பிரேமலதா அவர்கள் எல்லா மேடைகளிலும் கர்ஜித்திருக்க வேண்டும். இது தி.மு.க தொண்டர்களிடையே ஒருவிதமான சோர்வை ஏற்படுத்தியுள்ளது" என்பதுதான் தற்போதைய கள எதார்த்தம்.












Click it and Unblock the Notifications