மதுரை கிடைக்கலை.. வேற தொகுதியும் சரியில்லை.. கள்ளக்குறிச்சியில் இறங்கும் பிரேமலதா!
சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 7 தொகுதிகளுக்கு கீழ் எங்களுக்கு ஒதுக்கினால் கூட்டணிக்கு வரமாட்டோம் என்று அடம் செய்து வந்த தேமுதிக, திமுக கதவடைப்பு செய்த பின்னர் வேறு வழியின்றி அதிமுகவில் அடைக்கலம் புகுந்தது. இப்போது தங்களுக்கு வழங்கப்படவுள்ள 4 தொகுதிகளையும் எப்படியேனும் வென்றே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ளது தேமுதிக.
தேமுதிகவுக்கு அதிமுகவில் வழங்கப்படவுள்ள தொகுதிகளில் ஒன்று கள்ளக்குறிச்சி என்று கூறப்படுகிறது. கடந்த 2014 ம் ஆண்டு பாஜக கூட்டணியில் இந்த தொகுதியில் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போது அதற்கு பாமக பல உள்ளடி வேலைகள் செய்தது என்று கூறப்பட்டது. இப்போதும் அதே கூட்டணியில்தான் தேமுதிக உள்ளது. பாமகவும் இவர்களுடன்தான் உள்ளனர்.

கள நிலவரம் கலவரம்
இந்த தொகுதியின் களநிலவரம் குறித்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆய்வு செய்துள்ளார். அப்போது எதிர்தரப்பில் திமுக அணி சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி போட்டியிட உள்ளதையும் அங்குள்ள நிலவரங்கள் குறித்தும் கேட்டு அறிந்துள்ளார்.
கவுதம சிகாமணிக்கு சீட் கொடுக்கப்பட்டால் அங்கு தேமுதிக எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலினிடம் திமுக நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர்.

பொன்முடி மகனுக்கு சீட்
அதோடு 5 கல்லூரிகளுக்கு சொந்தக்காரரான பொன்முடி மீண்டும் தன்மகனை களம் இறக்க முயற்சிப்பது திமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்ப்பையும் மீறி திமுகவில் கவுதம சிகாமணிக்கே வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த தகவல்களை திரட்டிய தேமுதிகவினர் இதை அப்படியே பிரேமலதாவிடம் பாஸ் செய்துள்ளனர்.

பிரேமலதா போடும் கணக்கு
திமுகவினரின் எதிர்ப்பு இருந்தாலும் பொன்முடி என்ற ஆளுமை, பணபலம், படைபலம் இவையெல்லாம் கவுதம சிகாமணிக்கு பெரிய பிளஸ் ஆக இருக்கும் என்பதையும் பிரேமலதா உணர்ந்துள்ளார். அதோடு பொன்முடி இப்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் தீவிரமாக வேலையும் செய்து வருகிறாராம். இவற்றையும் தேமுதிகவினர் பிரேமலதாவிடம் கூறியதாக தெரிகிறது.

நேரடியாக களம் குதிக்க முடிவு
இப்படிப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சியை நாம் கைப்பற்ற வேண்டும் என்றால் நீங்களே அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தேமுதிகவினர் பிரேமலதாவிடம் கூறியுள்ளனர். முதலில் தனது தம்பி சுதீஷை அந்த தொகுதியில் போட்டியிட வைக்க பிரேமலதா எண்ணியிருந்த நிலையில் களநிலவரத்தை கேட்டறிந்த பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மகுடம் யாருக்கு
கள்ளக்குறிச்சி தொகுதியில் மந்திரி குமாரனும் கட்சித்தலைவர் மனைவியும் களமிறங்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கப் போவது என்னவோ மக்கள்தான்.. யாருக்கு சூட்டப்போகின்றனர். யாரை கவிழ்க்க போகின்றனர் என்பது மே மாதம் 23 ம் தேதி தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications