எமெர்ஜென்சியில் கலைக்கப்பட்டது எம்ஜிஆர் ஆட்சியா, கருணாநிதி ஆட்சியா? மோடியே கன்ப்யூஷ் ஆகிட்டாரே
Recommended Video
சென்னை: அவசரநிலை காலகட்டத்தில் எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று வண்டலூர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியின் முதல் பிரசாரக் கூட்டம், சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மாநில அரசுகள் கலைக்கப்பட்டது தொடர்பாக நரேந்திர மோடி விமர்சனம் செய்து பேசினார்.
அதிமுகவும் கிடையாது.. திமுக கதவும் குளோஸ்.. கடைசியில் தேமுதிகவின் திட்டம் இதுதான்.. நடக்குமா?
கருணாநிதி ஆட்சி
இந்த உரையின்போது, எமர்ஜென்சி காலத்தில் எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். இந்த ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்த்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் அதையே கூறினார். ஆனால் உண்மையில், எமர்ஜென்சி காலத்தில் கலைக்கப்பட்டது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி.
நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு
1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி, தலைமையிலான மத்திய அரசு, நாடு முழுக்க, நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியது. நெருக்கடி நிலைக்கு எதிராக தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி மற்றும் திமுக தலைவர்கள் குரல் கொடுத்தனர். இதையே காரணமாக காட்டி 1976ஆம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி கருணாநிதி தலைமையிலான ஆட்சி மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
எம்ஜிஆர் ஆட்சி
இதன் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. இந்த காலத்தில் எம்ஜிஆர் தலைமையில் அதிமுக பலம் பெற்றது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி 1980ம் ஆண்டு கலைக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதிமுக இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. லோக்சபா தேர்தலில் மோசமாக தோல்வியடைந்த மாநில கட்சிகளின் ஆட்சிகளை காங்கிரஸ் அரசு கலைத்தது. தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சியோடு சேர்த்து மொத்தம் ஒன்பது மாநிலங்களில் ஆட்சி கலைக்கப்பட்டது.
எம்ஜிஆர் அபிமானிகளை குறி வைத்த மோடி
எமர்ஜென்சி காலத்தில் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில், அது எம்ஜிஆர் ஆட்சி என்று நரேந்திர மோடி பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கி எம்ஜிஆரின் அபிமானிகள்தான். அவர்களை கவர்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். அதேபோன்று எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தது காங்கிரஸ் என்று கூறி எம்ஜிஆர் விசுவாசிகளுக்கு பழைய நினைவுகளை துளிர்விட செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவர் குறிப்பிட்ட காலகட்டம்தான் தவறானது என்பது கவனிக்கத்தக்கது.