பிஎம் கிசான்.. விவசாயிகளின் வரப்பிரசாதம்.. விரைவில் அதிரடி.. இதையும் விடாத அண்ணாமலை.. கவனித்த திமுக
சென்னை: பிஎம் கிசான் குறித்து, மிகப்பெரிய எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் நிலவிவருகிறது. இதற்காக வரப்போகும் பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்நிலையில், பிஎம் கிசான் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மிக முக்கியமான கேள்வியை திமுக அரசை நோக்கி எழுப்பியிருக்கிறார்.
பிஎம் கிசான் என்று சொல்லப்படும் "பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா" திட்டமானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காகவே மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட அருமையான திட்டமாகும். இதனை பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்றும் சொல்வார்கள்.

இந்த திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு பண உதவியை மத்திய அரசு தருகிறது.. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு வருடத்துக்கு மொத்தம் ரூ.6000 பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த பணத்தை கொண்டு, விவசாயிகள் மானிய விலையில் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம்..
மத்திய அரசு: இந்நிலையில், லோக்சபா தேர்தல் முடிந்து, மத்தியில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், பிரதமர் கிஷான் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு வழங்கப்படும் பணம் இரட்டிப்பாகலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது.. அதாவது தற்போது வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் தொகையை ரூ.12 ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழகத்திலும், பிஎம் கிசான் திட்டத்தில், 43 லட்சம் விவசாயிகள் ஆண்டுக்கு தலா ரூ.6,000 நிதி பெற்று வருகிறார்கள்..
அண்ணாமலை: இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில அரசு மீது முக்கிய குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கிறார்.. செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "பிஎம் கிசான் திட்டத்தில் சிறு குறு விவசாயிகள் மட்டுமல்லாமல், அரசு பணியில் இருப்பவர்கள், வார்டு கவுன்சிலராக இருப்பவர்கள் உள்ளிட்ட சிலரை தவிர்த்து, விவசாயிகள் அனைவரையும் சேர்க்கலாம் என்று மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்தது.
ஆனால், தமிழகத்தில் இப்போது 21 லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 22 லட்சம் விவசாயிகள் மட்டுமே பிஎம் கிசான் திட்டத்தில் தற்போது நிதி பெறுகிறார்கள்.
விவசாயிகள்: மத்திய அரசின் மீது விவசாயிகள் அதிருப்தி அடைய வேண்டும் என்பதற்காகவே விவசாயிகளை பிஎம் கிசான் திட்டத்தில் இருந்து நீக்கியிருக்கிறார்கள்.. எனவே, இதனை கண்டித்து திருச்சி தொடங்கி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடத்த இருக்கிறோம்" என்று அறிவித்திருக்கிறார்.
வரப்போகும் பட்ஜெட் கூட்டத்தொடரில், தவணை தொகை அதிகரிக்கலாம் என்ற தகவல், விவசாயிகளிடம் மகிழ்ச்சியை தந்துவரும்நிலையில், அண்ணாமலை தலைமையில் நடத்தப்போகும் போராட்டம் பெருத்த கவனத்தை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications