வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் தனியார் நிறுவன பஸ்கள் மோதி விபத்து.. மாணவர்கள் காயம்
சென்னை: சென்னையை அடுத்த வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் தனியார் நிறுவனத்தின் பேருந்து மற்றும் தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.
சென்னைக்கு தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், சென்னைக்கு வெளியில் இருந்தே கிளம்பி செல்லும் வகையில் புதிதாக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் எங்கு அமைந்துள்ளது என்றால், வண்டலூர் உயிரியல் பூங்காவை அடுத்து கேளம்பாக்கம் வண்டலூர் சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைந்த பின்னர், வழக்கத்தைவிட வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. முன்பு ஈசிஆரில் கேளம்பாக்கம், நாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் பயணிக்க விரும்புவோர், வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் போவார்கள் .
இப்போது சென்னை மாநகருக்குள் உள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக வண்டலூர் கேளம்பாக்கம் சாலையை சென்னைவாசிகள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதுவும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்த பின்னர், இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் அமைந்துள்ளன..
இந்நிலையில் இன்று காலை, வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் தனியார் நிறுவனத்தின் பேருந்து மற்றும் தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மாணவர்கள் 15 பேர், நிறுவன ஊழியர்கள் 4 பேர் காயம் அடைந்தனர்.அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications