பிரியாவுக்கு தவறான சிகிச்சை..சாட்சிகளை கலைக்க மாட்டோம்.. மருத்துவர்கள் முன் ஜாமீன் மனு தாக்கல்
சென்னை: தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா மரணமடைந்த வழக்கில், இரு மருத்துவர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளதால் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டோம் எனவும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாகவும் மருத்துவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
கால் முட்டியில் ஏற்பட்ட ஜவ்வு கிழிவு காரணமாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான ப்ரியா, கொளத்தூர் பெரியார்நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது கால் அகற்றப்பட்டது.
தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். பெரியார்நகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கடந்த 15ஆம் தேதி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களான பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மருத்துவர்கள் மனு தாக்கல்
இந்நிலையில், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி இரு மருத்துவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், இது போன்று பல்வேறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தாங்கள் அறுவை சிகிச்சை செய்த பலர் இன்று நல்ல நிலையில் உள்ளதாகவும், மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது என மனுவில் தெரிவித்துள்ளனர்.

முன்ஜாமீன் மனு
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளதால் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டோம் எனவும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாகவும் மருத்துவர்கள் இருவரும் மனுவில் உறுதி அளித்துள்ளனர். இந்த மனு இன்று நீதிபதி ஜெததீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

விசாரணை அறிக்கை
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை சென்னை காவல்துறையிடம் மருத்துவக் கல்வி இயக்குனரகம் நேற்று ஒப்படைத்துள்ளது. அந்த அறிக்கையில் மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாகவே கால்பந்து வீராங்கனை பிரியா இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் தவிர மயக்க மருந்து செலுத்திய மருத்துவர், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே கவனக்குறைவாக செயல்பட்டது விசாரணையின் மூலம் தெரியவந்திருக்கிறது.

கவனக்குறைவால் மரணம்
மருத்துவக் கல்வி இயக்குனரக அறிக்கையை அடிப்படையாக வைத்து இயற்கைக்கு மாறான மரணம் என போடப்பட்டிருந்த வழக்கு, மாற்றப்பட்டு அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் என்னும் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது. மேலும், மருத்துவ கல்வி இயக்குனராக அறிக்கையை சட்ட நிபுணர்களுக்கு அனுப்பி வைத்து, இந்த வழக்கில் கூடுதலாக சில பிரிவுகளின் கீழ் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கு பதிவு மாற்றப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்திருக்கிறது. முதல் கட்டமாக மருத்துவர்கள் இருவருக்கும் காவல்துறை சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில், அந்த சம்மனை பெற்றுக் கொள்ளாமல் மருத்துவர்கள் தலைமறைவாகும் பட்சத்தில் இருவரையும் கைது செய்யவும் தயாராக இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications