வாட்ஸ் அப் வீடியோ மூலம் ஓட்டு கேட்ட வழக்கு.. ஐகோர்ட் அதிரடி.. திமுக எம்.எல்.ஏவுக்கு சிக்கல்!
சென்னை : புதுச்சேரி திமுக எம்எல்ஏவுக்கு எதிரான தேர்தல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. இதனால், தேர்தல் பிரச்சார நேரம் முடிந்த பிறகு வாட்ஸ் அப் வீடியோ வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டதால் திமுக எம்.எல்.ஏ நாக தியாகராஜனின் வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட என்.நாக தியாகராஜன் 5,511 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் மனோகரன், திமுக எம்எல்ஏ நாக தியாகராஜனின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் வாட்ஸ் அப் வீடியோ மூலம் வாக்காளர்களின் அனுதாபத்தை பெறும் வகையில் தேர்தல் பரப்புரை செய்தது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது, எனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
வாட்ஸ் அப் மூலம் வீடியோ அனுப்பியது பொதுக் கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்வதாகாது. மொபைலில் பிரச்சாரம் செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. எனவே தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்எல்ஏ நாக தியாகராஜன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வாட்ஸ் அப் மூலம் பிரச்சாரம் செய்தது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகளை மீறிய செயலா இல்லையா? என்பது குறித்து விசாரணைக்குப் பிறகே தீர்மானிக்க முடியும் எனக் கூறி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி திமுக எம்எல்ஏ நாக தியாகராஜன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால், திமுக எம்.எல்.ஏ வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications