பாவம் சூர்யா; பாமக மிரட்டுகிறது; சூப்பர் ஸ்டாரும் உலக நாயகனும் எங்கே? தல-தளபதி எங்கே?
சென்னை: ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல்கள் அதிகரித்து வரும் சூழலில், நடிகர் சங்கமும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் என்ன செய்கின்றன என பேராசிரியர் அருணன் வினவியுள்ளார்.
மேலும், இன்று சூர்யாவுக்கு ஏற்பட்ட இதே நிலை நாளை அஜித்துக்கும், விஜய்க்கும், ஏன் ரஜினி, கமலுக்கு கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், தமிழ் திரையுலகம் நடிகர் சூர்யாவை தனிமரமாக விட்டது நியாயமல்ல என்பதை தனது ட்விட்டர் பதிவில் சூசகமாக தெரிவித்திருக்கிறார் பேராசிரியர் அருணன்.
நடிகர் சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவதாக மயிலாடுதுறை பாமக மாவட்டச் செயலாளர் சித்தமல்லி பழனிசாமி அறிவித்திருப்பதையும் அருணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அருணன் பதிவு
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகரும், பேராசிரியருமான அருணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் கொடுப்போம் என்று ஒரு கோஷ்டி அறிவிக்கிறது. ஓடிய அவரது படத்தை தடுத்து நிறுத்துகிறது. நடிகர் சங்கமும் தயாரிப்பாளர்கள் சங்கமும் என்ன செய்கின்றன?''

எங்கே போனார்கள்?
''சூப்பர் ஸ்டார்கள், உலக நாயகன்கள், தலைகள், தளபதிகள் எங்கே ? இன்று சூர்யாவுக்கு நாளை உங்களுக்கு''. இவ்வாறு பேராசிரியர் அருணன் தனது ஆதங்கத்தை இந்தப் பதிவின் மூலம் கொட்டித்தீர்த்திருக்கிறார். இதனிடையே தமிழகத்தில் ஒரு திரைப்படத்திற்கு சிக்கல் எழுகிற போது அதை அந்தப் படத்தின் பிரச்சனையை அதில் நடித்த உரிய நடிகர் மட்டுமே தீர்க்க வேண்டிய ஒரு சூழல் தமிழகத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படித்தான் பாபா விவகாரத்தில் ரஜினியும், விஸ்வரூபம் விவகாரத்தில் கமலும், தலைவா படத்திற்கு விஜயும் பல சவால்களை தன்னிச்சையாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

தயாரிப்பாளர்கள்
நடிகர் சூர்யா வெறுமனே நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. இதனால் தயாரிப்பாளர்கள் சங்கமாவது இதில் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகரும், பேராசிரியருமான அருணன் எதிர்பார்க்கிறார். இதனிடையே ஓடிடி மூலம் ஜெய்பீம் இதுவரை பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலவரம் என்ன
இதனிடையே ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட எந்த நடிகர்கள் தலையிட்டாலும் அது நிலைமையை மேலும் சூடாக்குமே தவிர சுமூகமாக்காது என்பது கவனிக்கத்தக்கது. விரைவில் நடிகர் சூர்யா தரப்பிலிருந்து விளக்க அறிக்கை ஒன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications