பாளையக்கோட்டை சிறையில் கைதி மரணம்..10 லட்சம் நிதியுதவி அளித்து முதல்வர் உத்தரவு
சென்னை ; பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த கைதி முத்துமனோ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிபிசிஐடிக்கு மாற்றம் செய்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், பூலம் குறுவட்டம், பூலம் பகுதி 2 கிராமம், கருணாநிதி தெரு, வாகைகுளம் என்ற முகவரியில் வசிக்கும் பாவநாசம் என்பவரின் மகன் முத்துமனோ (வயது 27) என்பவர், 22-4-2021 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் இறந்துள்ளார். இந்நிகழ்வு தொடர்பாக, பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தில் உயிரிழந்த முத்துமனோ-வின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்த முத்துமனோ-வின் குடும்பத்தினரின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவத்திற்கு காரணமான பாளையங்கோட்டை சிறைச்சாலைப் பணியாளர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்பொழுது வழக்கானது குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (சிபிசிஐடி) மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications