என்னாது டீ செலவு மிச்சமா?.. பில் வரட்டும்.. அப்போ தெரியும்.. அண்ணாமலைக்கு பிடிஆர் பதிலடி!
சென்னை: ஆளுநர் அளித்த தேனீர் விருந்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதை போல் மிச்சம் செய்யப்பட்டதா இல்லையா என்பது பில் வந்தால் தெரிந்துவிடும் என தமிழக நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட அனைத்து கட்சியினருக்கு ஆளுநர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட நீட் விலக்கு தீர்மானம், 7 தமிழர் விடுதலை தீர்மானம் உள்ளிட்ட 11 தீர்மானங்களை ஆளுநர் ஆர். என். ரவி நிறைவேற்றாததால் அவர் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள மாட்டோம் என திமுக கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டோர் அறிவித்தனர்.

பாமக புறக்கணிப்பு
அது போல் பாமகவும் தேநீர் விருந்தை புறக்கணித்தது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இந்த தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

ஆளுநர் தேனீர் விருந்து
ஆளுநர் தேனீர் விருந்தில் ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் கலந்து கொள்ளாதது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். அனைத்தும் மக்களின் வரிப்பணம்தான். மக்களின் வரிப்பணம் மிச்சமாகி இருக்கிறது. ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்து என்பது காலம் காலமாக நடைபெற்று வரும் மரபு என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள்
இவரது கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் தமிழக நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ஆளுநரின் தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை.
Recommended Video

பில் வரட்டும்
தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. அண்ணாமலை கூறியது போல் செலவு மிச்சம் செய்யப்பட்டதா இல்லையா என்பது பில் வந்தால் தெரிந்துவிடும் என பிடிஆர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக பாஜக நிர்வாகிகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பல்வேறு விவகாரங்களில் வார்த்தை போர் நீண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications