தேர்தல் செலவு! 20 கிலோ தங்க கட்டியை புதுவை பாஜக எம்பி விற்பனைக்கு கொடுத்ததாக ஹவாலா தரகர் வாக்குமூலம்
சென்னை: தேர்தல் நேரத்தில் ரூ 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தங்கக் கட்டிகளை விற்று பணம் பெற்றுக் கொடுக்குமாறு புதுவை எம்பி செல்வகணபதிதான் சொன்னார் என கைது செய்யப்பட்ட ஹவாலா இடைத்தரகர் சூரஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த லோக்சபா தேர்தலின் போது நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியரிடம் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரிலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததாலும் அந்த பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

பணத்தை கொண்டு சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்குமூலம் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், பாஜக தொழிற்துறை மாநில தலைவர் கோவர்த்தனின் மகன்கள் பாலாஜி, கிஷோர் மற்றும் பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட 15 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த ரயில்வே கேன்டீன் உரிமையாளர் முஸ்தபா அந்த 4 கோடி ரூபாய் தன்னுடையது என உரிமை கொண்டாடினார். ஆனால் விசாரணையில் அது அவருடைய பணம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கேசவ விநாயகத்திடம் கடந்த 7ஆம் தேதி, 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் பெற்ற தகவல்களின்படி புதுவை எம்பி செல்வகணபதி, சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த பங்கஜ், என்எஸ்சி போஸ் சாலையை சேர்ந்த சூரஜ் ஆகியோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. அந்த சம்மனை தொடர்ந்து நேற்று எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் புதுவை எம்பி செல்வகணபதி ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தனக்கு காலில் அடிப்பட்டுள்ளதாலும் பல்வேறு பணிகள் இருப்பதாலும் 3 மாதங்களுக்கு நேரில் ஆஜராக அவகாசம் அளிக்க வேண்டும் என சிபிசிஐடிக்கு தனது வழக்கறிஞர் மூலம் செல்வகணபதி கடிதம் எழுதியிருந்தார். இந்த அவகாசம் அளிப்பது குறித்து சட்ட நிபுணர்களிடம் விசாரணை நடத்திதான் முடிவு எடுக்கப்படும் என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் பங்கஜும் சூரஜும் சிபிசிஐடி போலீஸாரிடம் ஆஜராகினர். அவர்களிடம் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் சூரஜிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டதில் அவர் சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.
அதாவது அந்த ரூ 4 கோடி பணம் தேர்தல் செலவுக்கானதுதான். அவை 20 கிலோ தங்கத்தை விற்று பெறப்பட்ட பணம். தேர்தல் செலவுக்கு பணம் தேவை என்பதால் என்னிடம் புதுவை எம்பி செல்வகணபதி 15 கிலோ தங்கத்தை விற்றுத் தருமாறு கேட்டிருந்தார். அதன் படி சென்னை சவுகார்பேட்டையில் என்எஸ்சி போஸ் சாலையில் தங்கத்தை விற்று பணத்தை பெற்றுக் கொடுத்தேன்.
மீதமிருந்த 5 கிலோ தங்கத்தை அவர் புதுச்சேரியிலேயே விற்றுக் கொண்டதாக தெரிவித்தார். இவ்வாறு சூரஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். அது போல் இந்த சூரஜ், பாஜக நிர்வாகி கோவர்த்தனின் கார் ஓட்டுநர் விக்னேஷிடமும் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications