விஜய்க்கு அடுத்த ஷாக்.. ‘பவர்' கட்டுக்கு நடுவே தமிழக மின் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் ராஜினாமா! இனி ஒன்னும் செய்ய முடியாதே
சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையில் புதிதாக தவெகவின் ஆட்சி அமைந்துள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டு வருவதால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு நடுவே தான் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே 2 உறுப்பினர்கள் ராஜினாமா செய்த நிலையில் மொத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் காலியாகி உள்ளது. இது முதல்வர் விஜய்க்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்தி தவெக ஆட்சியை பிடித்துள்ளது. கட்சியின் தலைவர் விஜய் முதல்வராகி உள்ளார். அவரது அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராக நிர்மல் குமார் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மின் தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய சம்பவங்கள் நடந்தன. முதல்வர் விஜய்க்கு இது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மின்சாரம் தடைப்படுவதை நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC or Tamil Nadu Elecricity Regulatory Commission) தலைவர் ஆர். மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே இந்த ஆணையத்தின் மற்ற 2 உறுப்பினர்கள் ராஜினாமா செய்த நிலையில் தற்போது ஆணைய தலைவர் ஆர் மணிவண்ணனும் பதவி விலகி உள்ளார். இதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் காலியாக உள்ளது.
தற்போது பதவியை ராஜினாமா செய்துள்ள மணிவண்ணன் மின்சாரத்துறையில் நீண்டகால பணி அனுபவம் கொண்டவர். இவர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TNPDCL) பகிர்மான இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பிறகு கடந்த 2025 ஜனவரி மாதம் தான் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இவர் இந்த பொறுப்பில் 3 ஆண்டு வரை நீடிக்கலாம். ஆனால் ஒன்றரை ஆண்டுகளிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
தமிழக மின்சாரத்துறையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மிகவும் முக்கியமானதாகும். நீதிமன்ற அதிகாரம் கொண்ட இந்த ஆணையத்தில் ஒரு தலைவர், 2 உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்த ஆணையம் தான் மின் பகிர்மான நிறுவனங்களுக்கும், வணிக நுகர்வோருக்கும் இடையிலான மின்சாரம் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பது, பல்வேறு மின் திட்டங்கள், செலவினங்கள் மற்றும் மின் கொள்முதல் ஆகியவற்றை அனுமதித்து ஒப்புதல் அளிக்கும் பணிகளையும் மேற்கொள்கிறது.
மேலும் மின் கட்டணங்களை நிர்ணயிப்பதும், முக்கியப் பிரச்சனைகளில் முடிவெடுக்கக் கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளை இந்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான் செய்யும். தற்போது அந்த ஆணையத்தை சேர்ந்த தலைவர் - 2 உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் இந்த பணிகள் இனி பாதிக்கும். இதுதான் முதல்வர் விஜய் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் 2 உறுப்பினர் பதவிக்கு புதியவர்களை தேர்வு செய்யும் பணியை தமிழக அரசு தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தவுடன் முக்கிய பதவிகளில் இருந்து அதிகாரிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், தற்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் ஆர் மணிவண்ணனும் ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக தமிழ்நாடு தீயணைப்பு துறை ஆணையத்தின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்த ஓய்வு டிஜிபி சுனில் குமார் ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications