சபாநாயகரை சந்தித்த அதிமுக Ex எம்எல்ஏக்கள் பெருந்துறை ஜெயகுமார், தாராபுரம் சத்தியபாமா! புதிய விளக்கம்
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை, முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு சந்தித்தனர். அப்போது அவர்களின் ராஜினாமா குறித்து கூடுதல் விளக்கங்களை அளித்ததாக சொல்லப்படுகிறது.
அதிமுக சார்பில் போட்டியிட்டு மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்ற இவர்கள் திடீரென எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர்.

மேற்கண்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் அந்த தொகுதிகளில் தவெக சார்பில் இவர்கள் மூவரும் போட்டியிடுவார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால் அது போன்ற உறுதிமொழி ஏதேனும் கொடுக்கப்பட்டதா என தெரியவில்லை.
அவர்கள் மூவரை தொடர்ந்து அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர்.
அதிமுகவில் இருந்து விலகிய இவர்கள் அனைவரும் சொன்னது ஒரே ஒரு காரணம்தான். அதாவது மே 4 ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான போது தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக முற்பட்டதாகவும் இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டதாகவும் வந்த தகவல்கள்தான் என்கிறார்கள்.
திமுகவை எதிர்த்து அதிமுக தொடங்கப்பட்ட நிலையில் திமுகவுடன் எப்படி கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கலாம் என கேள்வி எழுப்பினர். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது பொய் வழக்குகளை போட்டு அவரை சிறையில் தள்ளியவர்களுடன் கைகோர்க்க எப்படி மனம் வந்தது என செய்தியாளர்கள் சந்திப்பில் குமுறுவிட்டனர்.
இந்த நிலையில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த போது கைப்பட எழுதி சபாநாயகரிடம் கொடுத்தனர். இசக்கி சுப்பையா மட்டும் பிரிண்டட் காப்பி கொடுத்த போது அதை வாங்க மறுத்த சபாநாயகர், கைப்பட எழுதி தருமாறு கேட்டார்.
இப்படி அதிமுகவில் இருந்து தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் வெளியேறி வருகிறார்கள். எஸ்.பி.வேலுமணியும், சி.வி.சண்முகமும் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என தெரியவில்லை.
இந்த நிலையில் இன்றைய தினம் காலை 11 மணிக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை அவரது அலுவலகத்தில் ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா ஆகியோர் சந்தித்தனர். அப்போது அவர்கள் ராஜினாமா குறித்து ஏற்கெனவே அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை என்பதால் இன்று மீண்டும் சந்தித்து கூடுதல் விளக்கம் அளித்ததாக சொல்லப்படுகிறது.
தற்போது தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டை தவெக அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பேசும் போதே எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அது போல் குதிரை பேர அரசு என்றும் பொய்க்கால் குதிரை அரசு என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார். மேலும் தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி திமுக, அதிமுக, பாஜக ஆகிய 3 கட்சிகளும் ஒரே நாளில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளாராம். இந்த நிலையில் தவெக எம்எல்ஏ இளையராஜாவை தவெகவுக்கு எதிராக செயல்படுமாறு திமுகவினர் ரூ 35 கோடி வரை பேரம் பேசியதாக அந்த எம்எல்ஏ, சென்னை காவல் துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவின் பேரில் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீன் பெற்றனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications