அதிமுகவில் விழும் அடுத்த விக்கெட்! எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில்.. ஓசூர் எம்எல்ஏ ஆப்சென்ட்!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்காமல் தவிர்த்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு தாவியிருக்கிறார்கள். அந்த வகையில் ஓசூர் எம்எல்ஏவும் பிளான் செய்கிறாரா? அதனால்தான் கூட்டத்தில் பங்கேற்கவில்லையா? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.

அதிமுகவில் அமளி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அரசியல் தளத்தில் பெரிய மாற்றங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக தவெக, கிளை அளவில் கட்சியை விரிவுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. புதியதாக இளைஞர்களை இணைத்து அவர்களுக்கு அரசியல் சொல்லிக்கொடுத்து, அவர்களை தலைவர்களாக மாற்றுவதை விட, ஏற்கெனவே அரசியல் கட்சிகளில் உள்ளவர்களை கட்சியில் இணைத்துக்கொள்வதில் தவெக ஆர்வம் காட்டுகிறது. அதிலும் குறிப்பாக அதிமுகவிலிருந்து வருகிறார்கள் என்றால் சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது.
சனிக்கிழமை ஷோ
இப்படியாக ஒவ்வொரு சனிக்கிழமையும், பனையூர் தவெக அலுவலகத்தில் அதிமுகவினர் இணைப்பு விழா களைகட்டி வருகிறது. இதுவரை 6 அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெகவில் இணைந்திருக்கின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி இதைப்பற்றியெல்லாம் பெரியதாக கண்டுக்கொண்டதை போல தெரியவில்லை.
அதிமுகவை கைப்பற்றும் தவெக
நாங்கள் முழுமையாக அதிமுகவினரை எங்கள் கட்சியில் இணைக்கப்போகிறோம் என்றும், இதுவரை 60 சதவிகித இணைப்பு சாத்தியமாகியிருக்கிறது.. இன்னும் 30% பேலன்ஸ் இருக்கிறது. இதையும் விரைவில் முடிப்போம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாக பேசியிருந்தும் கூட.. எடப்பாடி பழனிசாமி தங்கள் கட்சி நிர்வாகிகள் கட்சி மாறுவதை தடுக்க எந்த அதிரடியான உத்தரவையும் போடவில்லை. மாறாக, இடைத்தேர்தலில் நாம்தான் ஜெயிப்பொம் என்று நிர்வாகிகளிடையே திரும்ப.. திரும்ப பேசி வருகிறார்.
நிர்வாகிகளுடன் ஆலோசனை
அதிமுகவின் நிலை இப்படி இருக்கையில்.. இன்று தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடையே அவர் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி புறக்கணித்துள்ளார். ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால், அவருக்க வழங்கப்பட்டிருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இந்த அதிருப்தியில்தான் கூட்டத்தை புறக்கணித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
கே.சி.வீரமணியும் புறக்கணிப்பு
அதேபோல திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கே.சி.வீரமணியும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்துள்ளார். அப்படி எனில், இந்த எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய போகிறார்களா? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. வழக்கம்போது இவர்களையும் தடுக்காமல் எடப்பாடி வேடிக்கை பார்க்கப்போகிறாரா, என்றும் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications