ஏஆர் முருகதாஸ் பெயரை சொல்லி ஏமாற்றம்.. வாய்ப்புக்காக போன இடத்தில் நடந்த அவலம்! ஓபனாக பேசிய நடிகை சுவாசிகா
சென்னை: சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைப்பது என்பது பலருக்கு கனவு. ஆனால் அந்த கனவை பயன்படுத்தி ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் நடிகை சுவாசிகா தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் சந்தித்த ஏமாற்றம் குறித்து மனம் திறந்து பேசி இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் பிரபல இயக்குனர்களான லிங்குசாமி மற்றும் ஏ ஆர் முருகதாஸ் பெயரை சொல்லி தன்னிடம் ஏமாற்றியதாக சொல்லி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேனேஜரின் ஏமாற்று வேலை
நடிகை சுவாசிகா மலையாளத்தில் ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தார். அப்போது தமிழில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசையுடன் இருந்த காலத்தில் ஒருவர் தன்னை மேனேஜர் என்று அறிமுகம் செய்து கொண்டு, நீங்க ஒரு லட்சம் ரூபாய் கொண்டு வந்தால் ஏ.ஆர் முருகதாஸையும், லிங்குசாமியையும் சந்திக்க ஏற்பாடு செய்கிறோம். நல்ல வாய்ப்பை கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.
அந்த வார்த்தையை நம்பிய சுவாசிகா தனது அம்மாவிடம் பேசி பணத்தை ஏற்பாடு செய்து அவர்கள் சொன்ன ஹோட்டலுக்கு போயிருக்கிறார். ஆனால் அங்கு போன பிறகுதான் அவருக்கு உண்மையே தெரிந்து இருக்கிறது... அவர்கள் சொன்ன இயக்குநர்களும் இல்லை, இவர்களிடம் பேசிய மேனேஜரும் அங்கு இல்லை. அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு பணம் கட்டாமல் அங்கிருந்து தப்பித்து ஓடி இருப்பது அப்போதுதான் தெரிய வந்ததாம்.
அந்த நிமிடத்தில் தான் நாங்கள் ஏமாந்து விட்டோம் என்பதை புரிந்து கொண்டோம் என்று அவர் வேதனையுடன் சொல்லியிருக்கிறார். பிறகு இந்த ஏமாற்றத்தால் அவருடைய அம்மா, இங்கே நமக்கு மொழி தெரியாது யாரையும் தெரியாது.. இப்படி ஏமாற்றுகிறார்கள், இந்த இடம் நமக்கு சரியாக வராது என்று சொன்னாராம். அந்த நேரத்தில் சினிமா கனவை விடலாமா என்ற அளவிற்கு அவர் மனம் உடைந்து இருந்ததாக அந்த பேட்டியில் சுவாதிகா பேசி இருக்கிறார்.

அடையாளம் கொடுத்த திரைப்படங்கள்
ஆனாலும் அந்த ஏமாற்றம் அவரை சினிமாவிலிருந்து வெளியே அனுப்ப வில்லையாம். பல வருடங்கள் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வாய்ப்பு கிடைத்த இடங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து வந்திருக்கிறார். அதற்கு பிறகு தான் லப்பர் பந்து, மாமன், நூறு சாமி, கருப்பு போன்ற படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறது.
இது குறித்து அவர் பேசும்போது, தமிழ் ரசிகர்கள் ரொம்ப நல்லவர்கள். ஒருத்தரை பிடித்து விட்டால் அவர்களுக்கு அளவில்லாத அன்பு கொடுப்பார்கள். இன்று நான் இவ்வளவு அன்பை பெறுவதற்கு காரணம் அவர்கள் தான். அதை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவருடைய கணவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியல் ஹீரோ பிரேம் ஜேக்கப் தான் என்பது ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும்.

நடிகை சுவாசிகாவின் பேட்டி
சமீபத்தில் கூட ஒரு மலையாள டிவி நிகழ்ச்சியில் சுவாசிகா பேசும் போது தன்னுடைய கணவருக்காக தான் எல்லா வேலைகளையும் செய்வேன். அது எனக்கு ரொம்ப மனநிறைவை தரும்.. சாதாரண பெண்கள் போல தான் நானும் வீட்டு வேலைகள் செய்வேன். என்னுடைய கணவருக்காக காத்திருப்பது, அவருக்கு பிடித்ததை எல்லாம் பார்த்து பார்த்து செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்லி இருந்தார்.
அதே போல நான் எவ்வளவு சம்பாதித்து இருந்தாலும் என்னுடைய கணவரிடம் பணம் வாங்கி செலவு செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று அவர் பேசி இருந்தார். ஆனால் இந்த பேட்டி வெளியானதும் மலையாள ரசிகர்கள் தன்னை ரொம்ப ட்ரோல் செய்ததாகவும், தமிழ் ரசிகர்கள் தன்னை புரிந்து கொண்டதாகவும் ஒரு பேட்டியில் சுவாசிகா பேசியிருக்கிறார். எது எப்படியோ தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் அவர் பல ஏமாற்றங்களை சந்தித்து இருந்தாலும் இப்போது கொடி கட்டி பறக்கும் நடிகையாக மாறிவிட்டார்.














Click it and Unblock the Notifications