ஆளுநருக்கு போகும் அதிகாரம்? துணைவேந்தர் தேர்வு குழு சர்ச்சை.. தவெக அரசுக்கு எதிராக எழும் குரல்கள்
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி 15+ பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் இருக்கிறது.. துணை வேந்தர்களை நியமிக்க இப்போது 3 பேர் கொண்ட குழு உள்ள நிலையில், அதை தவெக அரசு 5 பேர் கொண்ட குழுவாக மாற்றப் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுபோல செய்தால் அதிகாரம் ஆளுநருக்குச் சென்றுவிடும் என்ற கண்டங்களும் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்.
அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் என மொத்தம் 15க்கும் மேற்பட்ட அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. நீண்ட காலமாகவே இந்த பதவிகள் நிரப்பப்படாமலேயே உள்ளன.

தாமதம்
துணை வேந்தர்கள் இல்லாததால் அன்றாட பணிகளைக் கவனிக்க மூன்று பேர் கொண்ட இடைக்கால நிர்வாகக் குழு செயல்பட்டு வருகிறது. உயர் கல்வித்துறைச் செயலர் மற்றும் சிண்டிகேட் குழுவில் இருந்து தேர்வு செய்யப்படும் இரு உறுப்பினர்களும் இந்த குழுவில் இருக்கிறார்கள். இருப்பினும், இவர்கள் மூவம் மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து உள்ளனர். எந்தவொரு முடிவாக இருந்தாலும் மூவரின் ஒப்புதலும் தேவைப்படுவதால் நடவடிக்கைகள் தாமதமாகி வருவதாக புகார்கள் உள்ளன.
புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது, புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்துவது, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நிர்வாக விவகாரங்கள் தொடங்கிப் பல முக்கிய செயல்பாடுகள் துணை வேந்தர் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் அரசு கவனம் செலுத்தி உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் என்பதே முக்கியமான கோரிக்கையாக உள்ளது.
பின்னணி
அதேநேரம் துணைவேந்தர் நியமன அதிகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. முன்பு ஆளுநரே துணை வேந்தரை நியமித்து வந்தார். இருப்பினும், துணை வேந்தர் நியமனத்தில் அதிருப்தி தெரிவித்த முந்தைய திமுக அரசு, துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வரும் வகையில் ஒரு மசோதாவை கொண்டு வந்தது. கடந்த 2022ம் ஆண்டிலேயே இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. இருப்பினும், அப்போதையே ஆளுநர் ரவி இதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்தார்.
இதனால் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்திற்குப் போனது. அந்த விவகாரம் உச்ச நீதிமன்றம்- சென்னை உயர் நீதிமன்றம் என மாறி மாறி போய் கொண்டு இருக்கிறது. இப்போது சென்னை ஐகோர்ட்டில் வரும் 29ம் தேதி இறுதி விசாரணை நடைபெற உள்ளது. அந்த சட்ட போராட்டம் இன்னும் முடிவுக்கு வராத சூழலில், துணைவேந்தர் தேர்வுக் குழுவை விரிவுபடுத்த தவெக அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
5 பேராக உயர்த்த முடிவு?
அதாவது இப்போது தேடுதல் குழுவில் 3 பேர் மட்டுமே உள்ள நிலையில், அதை 5 பேர் கொண்ட குழுவாக மாற்றுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார். குறிப்பாக ஆளுநர் தரப்பின் பரிந்துரைகளும் இடம்பெறக்கூடும் என்பது போல அவர் கூறியிருந்தார். இதுவே இப்போது பேசுபொருளாகியுள்ளது.
அதாவது ஆளுநர் விருப்பப்படி யுஜிசி பிரதிநிதி சேர்க்கப்பட்டால் அது மாநில உரிமையைப் பறிக்கும் என்பதே முக்கியமான வாதமாக இருக்கிறது. மேலும், இதனால் மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களின் நிர்வாக அதிகாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்றும் குற்றஞ்சாட்டினர். கடந்த ஆண்டுகளில் போராடிப் பெற்ற உரிமையை கோட்டைவிடக்கூடாது என்பதையே எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகிறார்கள்.
அன்புமணி
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை இப்போதுள்ள மூன்றில் இருந்து ஐந்தாக உயர்த்த அரசு தீர்மானித்து இருப்பதாகவும், இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் விரைவில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படுவர் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இது போகக் கூடாத ஊருக்கு வழி காட்டும் செயல் என்பது மட்டுமின்றி, துணை வேந்தர்கள் நியமன நடைமுறையை மேலும் சிக்கலாக்கும் செயல் ஆகும்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர்,'' துணை வேந்தர்கள் தேடல் குழுவில் 3 பேர் இருக்க வேண்டும் என அரசு கூறி வந்தது. பல்கலைக்கழக மானியக்குழு பிரதிநிதியையும் சேர்த்து 4 பேராக உயர்த்த வேண்டும் என்று முந்தைய ஆளுநர் கூறி வந்தார். இப்போது பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் ஒருவரையும் சேர்த்து 5 உறுப்பினர்களாக அதிகரிக்கலாம் என்று ஆளுநருக்கு நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டால் சிக்கல் தீர்ந்து விடும். அதன்பின் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டு விடுவார்கள்'' என்று தெரிவித்திருக்கிறார்.
கண்டனம்
இன்றைய நிலையில் துணை வேந்தர்கள் நியமனத்திற்கு தடையாக இருப்பது தேடல்குழுவில் மூவர் இருக்க வேண்டுமா, நால்வர் இருக்க வேண்டுமா அல்லது ஐவர் இருக்க வேண்டுமா? என்பது இல்லை. இந்த சிக்கல் அதையெல்லாம் கடந்து வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போதைய சிக்கல் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கி சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட சட்டங்கள் செல்லுமா, செல்லாதா? என்பது தான்.
எனவே, துணைவேந்தர்கள் தேடல் குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தும் திட்டத்தை அரசி கைவிட வேண்டும். மாறாக, வரும் 29ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள வழக்கை திறம்பட நடத்தி, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் தமிழ்நாடு அரசின் உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று வலியுறுத்தியுள்ளார்.














Click it and Unblock the Notifications