விதை திமுக போட்டது.. நாளை கரூரில் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் விஜய்.. பின்னணி!
சென்னை: கரூரில் நாளை ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதன் மூலமாக கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 13,500 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. இந்த முதலீடு எப்போது ஈர்க்கப்பட்டது என்பதை பார்க்கலாம்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்வர் விஜய் திருச்சியை தொடர்ந்து கரூர் செல்ல உள்ளார். கரூர் செல்லும் விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு அரசுப் பணிக்கான ஆணையை வழங்க இருக்கிறார். பல்வேறு அரசு துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது.

அதுமட்டுமல்லாமல் கரூரில் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதன் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசுக்கும், எவர்வான் கோத்தாரி நிறுவனத்திற்கும் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தம் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே திட்டத்திற்கான நிலம் ஒதுக்கப்பட்டு, தற்போது தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடக்கவுள்ளது.
பின்னலாடைத் தொழிலுக்குப் புகழ்பெற்ற கரூர் மாவட்டத்தில், இந்த புதிய மெகா காலணி உற்பத்தி ஆலை அமைவது மாவட்டத்தின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே தமிழக தொழில் முதலீடுகள் திமுக ஆட்சியில் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாக அமைச்சர் கீர்த்தனா குற்றம்சாட்டினார்.
ஆனால் கரூர் போன்ற 2ஆம் கட்ட நகரில் ரூ.1,700 கோடியில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதனை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். ஏற்கனவே திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஹிட்டாச்சி நிறுவனமும் ரூ.1,000 கோடி முதலீட்டை விரிவாக்க பணிகளுக்காக செய்ய உள்ளது. இதனால் திமுகவினர் பலரும் தவெக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதலீடு குறித்து கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications