தமிழக சட்டசபை தேர்தலோடு திமுக, அதிமுகவின் அகம்பாவம் அழிந்தது! அமைச்சர் விஸ்வநாதன் கடும் விமர்சனம்
புதுச்சேரி: நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலோடு திமுக அதிமுகவின் "நான், நீ " என்ற அகம்பாவம் அழிந்து போய் இருக்கிறது என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கடுமையாக விமர்சித்தார்
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 59 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனையாக, தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று கூறினார்கள். இதை யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. ஆட்சியில் பங்கு என்பது நடக்காது, முடியாது, சாத்தியமாகாது என்று கூறினார்கள். ஆனால் இந்த தேர்தலில் திமுக, அதிமுகவின் நான் நீ என்று அகம்பாவம் அழிந்து போயிருக்கிறது.
தேர்தலுக்கு முன்பு தவெக உடன் கூட்டணி அமைந்திருந்தால் 10 அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து இருந்திருப்பார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளே இருந்த சில குள்ளநரிகள் குழி பறித்தார்கள்.
அதனால் அந்த வாய்ப்பை இழந்தோம், யார் யாரெல்லாம் குள்ளநரி போன்று குழி பறித்தார்களோ அவர்களெல்லாம் இன்று வெளியேறி விட்டார்கள், நஞ்சு கலக்காத தமிழ் பேசுகிற முதல்வர் விஜய் பின்னால் சென்று கொண்டிருக்கிறோம்.
பல்வேறு தேர்தல்களில் திமுக வென்ற போது கூட ஆட்சியில் பங்கு கேளுங்கள் என்று கூறினோம். 2006- ல் திமுக மைனாரிட்டி அரசாக இருந்த போது கூட ஆட்சியில் பங்கேற்க முடியவில்லை. ஆனால்,2026- ல் கேட்காமலே கிடைத்தது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தமிழக வெற்றி கழக தலைமையிலான அணி அமோக வெற்றி பெறும், அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ள அனைத்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொண்டர்கள் விஜயை அன்புடன் நேசிக்கிறார்கள் பாராட்டுகிறார்கள்.
இந்த நேசிப்பும் பாராட்டும் வெற்றிக்காக கை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் விஜய்யை விரைவில் சந்தித்து பேச உள்ளோம். அப்பொழுது புதுச்சேரியில் உள்ள அரசியல் பிரச்சனைகள், அரசாங்கம் சார்ந்த பிரச்சனைகள் கொள்கை சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேச இருக்கிறோம்.
தமிழக ஆளுநர் உடனான மோதல் போக்கை முதலமைச்சர் விஜய் தலைமையிலான நாங்கள் கடைபிடிக்க விரும்பவில்லை. மாறாக முதல்வரும், ஆளுநரும் மிக ஆழமான புரிதலுடன் வெற்றி கூட்டணியை அமைத்திருக்கிறோம். இந்த கூட்டணி என்பது தமிழக மண் சார்ந்த நலம் சார்ந்த உரிமை சார்ந்த எந்த முடிவையும் எடுக்க முதலமைச்சர் காத்துக் கொண்டிருக்கிறார்.
அனைத்து கல்லூரிகளுக்கும் விரைவில் துணைவேந்தர் நியமிக்க இருக்கிறோம். தமிழக முதல்வரும் ஆளுநரும் குடும்ப உறவோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்
1967க்கு பிறகு ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம், திமுக முடியாது என்று சொன்னார்கள். ஆனால் இப்போது எப்படி அது சாத்தியமாகி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
அனைத்து காலகட்டத்திலும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் உழைப்பும் வியர்வையும் தான் திமுக ஆட்சிக்கு வந்ததற்கான காரணம்,தற்போது ஜோசப் விஜய் தலைமையில் லஞ்ச, லாவண்யம் அற்ற ஒரு நல்லாட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.













Click it and Unblock the Notifications