கடலே கொதிக்குது.. அலறுது ஐரோப்பா! இது தான் மிகக் கொடூரமான ஜூனாம்! தலைசுற்ற வைக்கும் ஷாக் ரிப்போர்ட்!
பாரீஸ்: ஐரோப்பா முழுவதும் கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்ப அலை தொடரும் நிலையில், 2026 ஜூன் மாதம் மேற்கு ஐரோப்பாவின் வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஜூன் மாதமாக பதிவாகியுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை கண்காணிப்பு அமைப்பான கோப்பர்னிகஸ் காலநிலை மாற்ற சேவை (Copernicus Climate Change Service) தெரிவித்துள்ளது. மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பருவநிலை மாற்றமே இந்த அதீத வெப்பத்திற்கான முக்கிய காரணம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்ப அலை இன்னும் முழுமையாக தணியாத நிலையில், தற்போது ஐரோப்பாவின் பல நாடுகளை மற்றொரு புதிய வெப்ப அலை தாக்கி வருகிறது. மே மாதத்திலேயே வழக்கத்தை விட முன்னதாகவே வெப்பம் அதிகரித்தது.

இந்த நிலையில், ஜூன் மாதம் வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியது. இதனால், ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோப்பர்னிகஸ் வெளியிட்ட தரவுகளின்படி, 2026 ஜூன் மாதத்தில் மேற்கு ஐரோப்பாவின் சராசரி வெப்பநிலை 20.74 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
ஐரோப்பா வெப்ப அலை
இது 1991 முதல் 2020 வரையிலான சராசரியை விட 3 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகும். இதற்கு முன்பு 2025 ஜூன் மாதத்தில் பதிவான சாதனையை இந்த ஆண்டு முறியடித்துள்ளது. உலகளாவிய அளவிலும், ஐரோப்பா முழுவதும் எடுத்துக் கொண்டாலும், 2026 ஜூன் மாதம் வரலாற்றிலேயே இரண்டாவது அதிக வெப்பமான ஜூன் மாதமாக பதிவாகியுள்ளது. தொழில்துறை வளர்ச்சிக்கு முந்தைய 1850-1900 காலகட்டத்தை ஒப்பிடும்போது, உலகின் சராசரி வெப்பநிலை 1.39 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாகவும் கோப்பர்னிகஸ் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம்
ஐரோப்பிய நடுத்தர கால வானிலை முன்னறிவிப்பு மையத்தின் (ECMWF) பருவநிலை நிபுணர் சமந்தா பர்கெஸ் கூறுகையில், "உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், எதிர்காலத்தில் வெப்ப அலைகள் இன்னும் அதிகரிக்கும். அவை நீண்ட நாட்கள் நீடிக்கும். அதிக தீவிரத்துடன் இருக்கும். மேலும், இதுவரை பாதிக்கப்படாத பல பகுதிகளையும் தாக்கும்" என்று எச்சரித்துள்ளார்.
ஹீட் டோம்
கடந்த ஜூன் மாதத்தில் ஐரோப்பாவை தாக்கிய கடும் வெப்பத்திற்கு முக்கிய காரணமாக 'ஹீட் டோம்' (Heat Dome) எனப்படும் வானிலை நிகழ்வு குறிப்பிடப்படுகிறது. அதாவது, வளிமண்டலத்தில் உருவாகும் உயர் அழுத்த மண்டலம், ஒரு பாத்திரத்தின் மீது மூடியை வைத்தது போல வெப்பத்தை வெளியேற விடாமல் அடைத்து வைத்துவிடுகிறது. இதன் காரணமாக, பல நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவானது.
வெப்பநிலை
இந்த வெப்ப அலை காரணமாக பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 15 முதல் 30 வரை நீடித்த வெப்ப அலையின் போது, ஐரோப்பாவில் சுமார் 41 கோடி மக்கள் 35 டிகிரி செல்சியஸை தாண்டிய வெப்பநிலையை அனுபவித்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக வெப்பத்தால் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததுடன், முதியவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர்.
டிராபிக்கல் நைட்ஸ்
இந்த முறை ஏற்பட்ட வெப்ப அலையின் தீவிரத்தை அதிகரித்த முக்கிய காரணங்களில் ஒன்று காற்றில் அதிக ஈரப்பதம் இருந்ததுதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக இரவு நேரங்களில் வெப்பம் குறைந்து உடலுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும். ஆனால் இந்த முறை, பல நாட்களில் தொடர்ந்து 'டிராபிக்கல் நைட்ஸ்' எனப்படும் அதிக வெப்பமுள்ள இரவுகள் பதிவாகின. இதனால் மக்கள் தூங்க முடியாமல் கடும் அவதியடைந்தனர்.
கடல் நீரின் வெப்பநிலை
மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் கடல் நீரின் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள், கடல்சார் சுற்றுச்சூழல் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. கடல் வெப்பமடைவதால், இரவு நேரங்களில் கடற்காற்று மூலம் கிடைக்கும் குளிர்ச்சியும் குறைந்து, கடலோர பகுதிகளிலும் வெப்பம் அதிகமாகவே நீடிக்கிறது என்று விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.
காட்டுத்தீ
வெப்பத்துடன் இணைந்து மழைப்பொழிவு குறைந்ததால் கிழக்கு ஐரோப்பாவில் வறட்சி அபாயம் அதிகரித்துள்ளது. ஸ்பெயின், போர்ச்சுகல், தெற்கு பிரான்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத்தீ சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. காடுகள், விவசாய நிலங்கள், இயற்கை வளங்கள் உள்ளிட்டவை பெருமளவில் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பருவநிலை மாற்றம்
கடந்த மாதம் வெளியான World Weather Attribution ஆய்வும், 2026 ஜூன் மாதத்தில் ஐரோப்பாவை தாக்கிய வெப்ப அலை, பருவநிலை மாற்றம் இல்லாமல் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்று குறிப்பிட்டிருந்தது. இதேபோன்ற ஒரு வெப்ப அலை 2003-ல் ஏற்பட்டிருந்தால், அது தற்போதையதை விட சுமார் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகவே இருந்திருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய பருவநிலை
ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் தற்போதைய கடுமையான வெப்பத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. எனவே, நகரங்கள், மருத்துவ அமைப்புகள் மற்றும் பொதுக்கட்டமைப்புகளை புதிய பருவநிலைச் சூழலுக்கு ஏற்ப மாற்றுவது அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.














Click it and Unblock the Notifications