பள்ளிகளில் கீர்த்தனா ஆய்வு செய்யும் நேரத்தில்..கொரியா போய் முதலீடுகளை அள்ளிய ஆந்திரா! எல்லாம் போச்சு
சென்னை: தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பள்ளிகளில் ஆய்வுப்பணிகளை செய்து கொண்டு இருக்கும் அதே நேரத்தில்.. ஆந்திர பிரதேச தொழில்துறை அமைச்சர் நாரா லோகேஷ் தென் கொரியா சென்று தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முதலீடுகளை தட்டி தூக்கி வருகிறார்.
தமிழகத்தின் கல்வித் துறை செயல்பாடுகளை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில், தனது துறைசாராத விவகாரங்களில் அமைச்சர் கீர்த்தனா கவனம் செலுத்தி வரும் வேளையில்தான் ஆந்திர பிரதேசம் முதலீடுகளில் தீவிரம் காட்டி வருகிறது.

அண்டை மாநிலமான ஆந்திரா தமிழகத்திற்கு வர வேண்டிய மாபெரும் உலகளாவிய முதலீடுகளை ஒட்டுமொத்தமாகத் தன் வசம் ஈர்த்து வருகிறது. ஆந்திராவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நாரா லோகேஷ் மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தற்போது காட்டி வரும் அசுர வேகம், தமிழகத்தின் ஒட்டுமொத்த தொழில்துறை எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
தென் கொரியாவில் நாரா லோகேஷ் வேட்டை
தற்போது தென் கொரியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், பல்வேறு தென் கொரிய நிறுவனங்களை முதலீட்டிற்கு அழைத்துள்ளார்.
அம்மாநிலத்தின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கும், ஸ்டார்ட்-அப்களுக்கும் வழிகாட்ட தென் கொரிய நிறுவனங்களை அழைத்துள்ளார். தங்கள் மாநிலத்தில் உள்ள நிறுவனங்களுக்கு நிதி மேலாண்மை மற்றும் ஆலோசனைகளை வழங்கவும் தென் கொரியாவின் முன்னணி நிதி நிறுவனமான பிஎன்டிகே வென்ச்சர் கேபிடல் அமைப்பிற்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளார்.
தென் கொரிய நிறுவனங்களுடன் மீட்டிங்
அபெக்ஸ் கொரியா என்ற பெயர் வெளிநாட்டுத் தொடர்பு மையத்தையும் ஆந்திர அரசு அங்கு நேரடியாகத் தொடங்கியுள்ளது. கொரிய நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்வதை எளிதாக்க இத்தகைய நிரந்தரக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் கைகளை விட்டு போகும் ஜாம்பவான் நிறுவனங்கள்
ஆந்திர அரசு வெறும் விளம்பரங்களோடு நின்றுவிடாமல், உலகளாவிய முன்னணி நிறுவனங்களை நேரடியாக அணுகி 'முதலீடுகளைத் தட்டிப்பறிக்கிறது.
ஷூஆல்ஸ் என்ற பிரபல நிறுவனம் ஆந்திராவில் ₹300 கோடி மதிப்பில் மெகா காலணி உற்பத்தி ஆலையை அமைக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
சொலம் குரூப் நிறுவனம் சென்னைக்கு அருகில் ஆந்திராவின் கீழ் வரும் ஸ்ரீ சிட்டியில் ₹338 கோடி மதிப்பிலான மின்சார வாகன சார்ஜர் மற்றும் எலக்ட்ரானிக் ஷெல்ஃப் லேபிள்கள் உற்பத்தி ஆலையை விரைவுபடுத்த நாரா லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இவை தவிர APACT, சாம்சங், எல்ஜி, பூ யங, மற்றும் ஹ்வாஸெங் ஆகிய ஜாம்பவான் நிறுவனங்களுடன் ஆந்திர அரசு நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அடுக்கடுக்கான சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.
இது அவர்கள் குறிவைத்துள்ள நிறுவனங்களின் பட்டியலில் 50 விழுக்காடு கூட இல்லை என்பதுதான் இன்னும் அதிர்ச்சியளிக்கும் உண்மை.
தமிழகத்தின் பலமாக இருந்த எலக்ட்ரானிக்ஸ் மற்றும் காலணி உற்பத்தி ஆகிய இரண்டு முக்கியத் துறைகளையும் குப்பம், திருப்பதி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளை நோக்கி ஆந்திரா மிக வேகமாக நகர்த்தி வருகிறது.
ஆனால் இதே நேரத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் கீர்த்தானோவோ.. பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆந்திர அரசு தமிழ்நாட்டின் முதலீடுகளைப் பறிப்பது மட்டுமன்றி.. தமிழகத்திற்கு முதலீடுகளைக் கொண்டு வருவதில் மிக முக்கிய காரணமாக விளங்கிய Guidance TN அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகளையும் ஊழியர்களையும் தங்கள் பக்கம் இழுக்கத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழ்நாட்டின் எதிர்காலமே இருண்ட காலம் ஆகும் அவலம் ஏற்பட்டு உள்ளது.














Click it and Unblock the Notifications