முடங்கியது ₹440 கோடி! மம்தாவுக்கு சொந்தக் கட்சியிலேயே விழுந்த மெகா அடி.. இனி ரொம்ப கஷ்டம் தான்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி, இப்போது அக்கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் அளவிற்குச் சென்றுள்ளது. சுமார் 440 கோடி ரூபாய் பணம் உள்ள மூன்று வங்கிக் கணக்குகள் தற்போது போலீசாரின் உத்தரவின் பேரில் முடக்கப்பட்டுள்ளன. இதனால் மம்தா கடும் கோபத்தில் இருக்கிறார்.
மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு அங்கு அரசியல் மொத்தமாக மாறிவிட்டது. தேர்தலுக்கு முன்பு வரை உச்சபட்ச பவரை கொண்டு இருந்த மம்தாவின் நிலைமை இப்போது மிக மோசமாக இருக்கிறது. சொந்த கட்சிக்கு உள்ளேயே அவருக்குச் செல்வாக்கு இல்லை. அவருக்கு எதிராகக் கலகம் செய்துள்ள எம்எல்ஏக்கள், மம்தாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதற்கிடையே மம்தாவுக்கு செக் வைக்கும் மிகப் பெரிய நடவடிக்கை ஒன்றை அவர்கள் எடுத்துள்ளனர்.

ரூ.440 கோடி
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான மூன்று வங்கிக் கணக்குகள் ஒரு தனியார் வங்கியில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கணக்குகளில் சுமார் 440 கோடி ரூபாய் உள்ளது. தற்போது இந்த மூன்று கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்தக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கவோ அல்லது வேறு யாருக்கும் அனுப்பவோ முடியாது. ஆனால், அந்தக் கணக்குகளுக்குப் பணம் வரவு வைக்கப்படலாம். அதாவது பணத்தை வரவு வைக்கலாம்.. ஆனால் வெளியே எடுக்க முடியாது.
முடக்கம்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் நிதி மற்றும் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துவதில் இரண்டு பிரிவுகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ஒன்று மம்தா தலைமையிலான அணி.. இன்னொன்று அவருக்கு எதிராகக் கலகம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி அணி.
புகார்
ரிதாப்ரதா பானர்ஜி ஆதரவு எம்எல்ஏக்கள் வங்கிக் கணக்கு தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் புகாரில், கட்சியின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சந்தேகம் எழுப்பி இருந்தனர். அதாவது வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள இவ்வளவு பெரிய தொகை சட்டப்பூர்வமான வழியில் வந்ததா அல்லது சட்டவிரோத செயல்கள் மூலம் வந்ததா என்று விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
இது பொதுமக்களிடம் இருந்து சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட பணமா? அரசு நிதியைத் திசைதிருப்பியதன் மூலம் வந்த பணமா? பல்வேறு ஊழல் முறைகேடுகள் மூலம் திரட்டப்பட்ட பணமா? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். தவறான வழிகளில் திரட்டப்பட்ட பணம் இந்தக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த எம்எல்ஏக்கள் புகாரில் கூறியுள்ளனர்.
மம்தா ஆதரவாளர்
இதற்கிடையில், மம்தா பானர்ஜியின் தீவிர ஆதரவாளரான அரூப் பிஸ்வாஸ், சில நாட்களுக்கு முன்பே வங்கிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், "கட்சிக்குள் தலைமை போட்டி நிலவுவதால், சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கட்சியின் டெபாசிட்களை பாதுகாக்க வேண்டும். இந்தப் பிரச்சனை முடியும் வரை அந்த பணத்தைப் பயன்படுத்த யாரையும் அனுமதிக்கக் கூடாது" என்று கோரியிருந்தார்.
அதாவது அதிகார மோதல் காரணமாக இரு தரப்புமே பணத்தை முடக்க வேண்டும் என்றே கோரிக்கை விடுத்திருந்தது. அரூப் மம்தா தரப்பு நிர்வாகக் காரணங்களுக்காகக் கணக்கை முடக்கச் சொன்னார். ஆனால், அதிருப்தி எம்எல்ஏக்களோ குற்றவியல் விசாரணை நடத்தக் கோரி கணக்கை முடக்க வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications