“கடும் நடவடிக்கை பாயும்”.. தனியார் பள்ளிகளுக்கு ‘செக்’ வைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
சென்னை: "தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடாத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை பாயும். மேலும் நிலுவை கட்டணங்களை காரணம் காட்டி மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்களை வழங்க மறுக்க கூடாது" என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பர பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மே 25ம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, ஜூன் 5-ம் தேதிக்குள் கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடும்படி, அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் ஜூன் 1 ம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்தார்.
இந்நிலையில் மாநில தகவல் ஆணைய உத்தரவையும், தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த அறிவிப்பையும் ரத்து செய்யக் கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, தனியார் பள்ளிகள் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள் வராது என்ற போதும், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்படி நியாயத்தன்மையை வெளிப்படுத்த மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும், கல்விக் கட்டண விவரங்களை விளம்பர பலகைகளில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடாத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை பாயும். மேலும் நிலுவை கட்டணங்களை காரணம் காட்டி மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்களை வழங்க மறுக்க கூடாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "எந்த கட்சியினராக இருந்தாலும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த கூடாது. அதையும் மீறி கட்சி நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் முதலமைச்சர் பிறந்தநாள் நிகழ்ச்சி குறித்து உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளதற்கு, அரசு சட்டபூர்வமாக பதில் அளிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "மாணவர்களின் உயர்கல்வியை தனியார் பள்ளிகள் தடுக்கக்கூடாது. எந்தச் சூழலிலும் தேவையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக் கூடாது. மின்வெட்டால் காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி விடுமுறை அளித்ததா என விசாரணை மேற்கொள்ளப்படும்." என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications