85 வயதிலும் ஸ்பாட்டில் வந்து நின்ற துரைமுருகன்! கருணாநிதியின் சிஷ்யன் என வியந்து நின்ற அதிகாரிகள்!
சென்னை: பரம்பிக்குளம் அணையின் ஷட்டர் சேதமடைந்த தகவல் அறிந்த அமைச்சர் துரைமுருகன், அடுத்த சில மணி நேரங்களில் அங்கு சென்று ஆய்வு நடத்தியது பொதுப்பணித்துறை அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
''என்ன மனுஷன்யா இவரு.. இந்த வயதிலும் என்னா ஒரு சுறுசுறுப்பு, வேகம்'' என பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நீர்வளத்துறை அதிகாரிகளும் தங்களுக்குள் துரைமுருகனை பற்றி பிரமித்து பேசியிருக்கின்றனர்.
சென்னையிலிருந்து விமான மூலம் கோவை வந்தடைந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் பயணித்து கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணைக்கு சென்றடைந்தார் அமைச்சர் துரைமுருகன்.

பரம்பிக்குளம் அணை
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணையில், பிரதான ஷட்டர்களில் ஒன்று சேதமாகி தண்ணீர் வீணாகும் தகவல் நேற்று காலை அமைச்சர் துரைமுருகனுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து அதிகாரிகளை அழைத்து போய் என்னவென்று பாருங்கள் எனக் கூறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், உடனே பரம்பிக்குளம் புறப்படுங்கள் போவோம் எனக் கூறி வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

85 வயதில் திடீர் பயணம்
அமைச்சர் துரைமுருகனுக்கு 85 வயதாகிறது. இந்த வயதில் இவ்வளவு தூரம் எந்த திட்டமிடலும் இல்லாமல் அவர் புறப்படுவார் என்பதை சிறிதும் எதிர்பார்க்காத பொதுப்பணி மற்றும் நீர்வாத்துறை அதிகாரிகள் ஆச்சரியப்பட்டு போனார்கள். இதையடுத்து இது தொடர்பாக தகவல் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கும், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அவர்களை கோவை விமான நிலையத்தில் துரைமுருகனை வரவேற்று பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம் அணைக்கு அழைத்துச் சென்றார்கள்.

துரைமுருகன் அப்செட்
அங்கு சென்று தண்ணீர் வீணாவதை பார்த்த அமைச்சர் துரைமுருகன் கடும் அப்செட் ஆனார். தன் வாழ்நாளில் இப்படி ஒரு நிகழ்வை கண்டதில்லை என்றும் மனம் வேதனையில் துடிப்பதாகவும் கூறினார். சேதமான ஷட்டரை சீரமைக்க எவ்வளவு துரிதமாக செயல்பட முடியுமோ அவ்வளவு துரிதமாக செயல்படுங்கள் என அதிகாரிகளுக்கு கறாராக உத்தரவு போட்டார். மேலும், அணையிலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை வைத்த கண் வாங்காமல் 5 நிமிடங்கள் பார்த்துக் கொண்டே இருந்தார் துரைமுருகன்.

கருணாநிதி சிஷ்யன்
துரைமுருகன் வகிக்கும் பதவிக்கும் அவருக்கும் இருக்கும் அதிகாரத்துக்கும் நான்கு உயர் அதிகாரிகளை அழைத்து அவர்களை நிகழ்விடத்துக்கு அனுப்பியிருக்கலாம். ஆனால் தாமே நேரடியாக பல நூறு கிலோமிட்டர்கள் முன் திட்டமிடல் இல்லாமல் பயணித்து களத்திற்கு சென்று ஆய்வு நடத்தி தாம் கருணாநிதியின் சிஷ்யன் என்பதை நிரூபித்திருக்கிறார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications