மாமல்லபுரத்தை அழகுபடுத்த எவ்வளவு தேவை? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு!
மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைபடும் நிதி குறித்து விவாதித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைபடும் நிதி குறித்து விவாதித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரத்தை அழகு படுத்துவது தொடர்பாக நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பராமரிப்பு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து விவரங்களை ஒப்படைக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது..
தூத்துக்குடி மேயர் பதவி- எஸ்சி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ததை எதிர்க்கும் வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்
அப்போது, மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலித்த வகையில், 2018-19ம் ஆண்டுகளில் 8 கோடியே 14 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக இந்திய தொல்லியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
யுனஸ்கோ-வால் புராதன சின்னம் என அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லபுரத்தை அழகுபடுத்தும் பணிகளுக்கு மத்திய அரசு தான் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.
இதையடுத்து, மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி, மத்திய - மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு குறித்து, தமிழக சுற்றுலா துறை செயலாளர், நிதித் துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மற்றும் தொல்லியல் துறை இயக்குனர் ஆகியோர் விவாதித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.