ஏதோ மிட் நைட் மசாலா மாதிரி ராத்திரி 3 மணிக்கு ஐடி ரெய்டு வருவதா..ஆர்.எஸ்.பாரதி கேள்வி
சென்னை: மிட் நைட் மசாலா போன்று இரவு 3 மணிக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் அவருடைய நண்பர்களின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரி துறை சோதனை நடத்தப்பட்டது. செந்தில் பாலாஜி டாஸ்மாக் மேலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் இந்த ரெய்டு குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் போர்க்களத்தில் குதிரை படை, காலாட் படை, யானை படை உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது போல் பாஜக அரசு வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை பயன்படுத்தி வருகிறது.
கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து ரூ 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தனர். வருமானவரித் துறை சோதனை பற்றியெல்லாம் கவலையில்லை. கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவு பாஜகவுக்கு அச்சத்தை கொடுத்துவிட்டது. திமுகவினர் இதை பார்த்து அஞ்சமாட்டோம்.
செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என அண்ணாமலை திட்டமிட்டுச் செயல்படுகிறார். தமிழகத்திற்கு வரும் முதலீடு செய்திகளை மழுங்கடிக்கும் விதமாக இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. கர்நாடகா தேர்தலில் பிரதமர் மோடி 27 கி.மீ தூரம் பேரணி போய் ஓட்டு கேட்டார். ஆனாலும் மக்கள் போடவில்லை. தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணங்களை திசை திருப்புவதற்காகவே இந்த ரெய்டு நடக்கிறது.
10 நாட்களுக்கு முன்பு அண்ணாமலை சவால்விட்டார். அதுதான் இன்று செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. காவல் துறைக்கு கூட தகவல் கொடுக்காமல் சோதனைக்கு சென்றுள்ளனர். மிட் நைட் மசாலா போன்று அதிகாலை 3 மணிக்கு ரெய்டுக்கு வந்துள்ளனர். காவல் துறையினர் இல்லாததால் ரெய்டுக்கு வந்தவர்கள் யாரென தெரியவில்லை.

வந்தது திருடர்களா, கொலைக்காரர்களா என தெரியாமல் தற்காப்புக்குக் கூட தாக்கி இருக்கலாம். திட்டமிட்டு சட்டம் ஒழுங்கில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். அதிகாரிகளின் வாகனங்கள் தாக்கப்பட்டது தவறுதான், வருமான வரித் துறை அதிகாரிகளின் வாகனங்களை தாக்கியவர்கள் திமுகவினராக இருந்தால் அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications