2018 இல் நடந்த சம்பவம்.. அன்றே நினைத்தேன்.. விஜயகாந்த் பற்றிய ராதாரவி ஒபன் டாக்
சென்னை: அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என்று விஜயகாந்த்தைத் தடுத்ததாக அவரது உயிர் நண்பர் நடிகர் ராதாரவி தெரிவித்திருக்கிறார்.
நடிகர் விஜயகாந்த் திடீர் மறைவால் தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியது. அவரை நேரில் பார்க்காதவர்கள்கூட அந்தச் சோகக் கடலில் மூழ்கித் தவித்து வருகின்றனர்.

அவரது உயிர் நண்பர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவர்கள் பலரும் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது நண்பர் விஜயகாந்த், 1985இல் எம்.ஆர்.ராதா சிலைத் திறப்பு விழாவுக்குச் செல்ல பணம் இல்லாமல் தவித்தபோது கேட்காமலே 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியதாகத் தெரிவித்துள்ளார் ராதாரவி.

மேலும் அவர் தனது நண்பர் விஜயகாந்த் பற்றிப் பேசுகையில் "அரசியல் பற்றி எல்லாம் அதிக அறிவு விஜயகாந்த்திற்கு கிடையாது. பொதுவான அரசியல் பேசுவான். அவனுக்குக் கலைஞரை அதிகம் பிடிக்கும். கூடவே அவன் எம்.ஜி.ஆர் ரசிகன். அவன் எவ்வளவு வெள்ளந்தியான ஆள் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.
அவன் கட்சி ஆரம்பிக்கப் போகிறான். அந்தக் கட்சியின் தொடக்கவிழா பத்திரிகையைக் கலைஞருக்குப் போய் கொடுத்தான். நான் அன்று அவனை நடிகர் சங்கத்தில் சந்தித்தேன். 'ஏண்டா அவருக்குப் போய் பத்திரிகை வைக்கிற? எதுக்கு அவருக்குக் கொடுத்த?' என்று சத்தம் போட்டேன்.

அவர் ஒரு மிகப் பெரிய கட்சியின் தலைவர் அவருக்குப் போய் கொடுக்கலாமா? அதுகூட அவனுக்குத் தெரியவில்லை. 'இல்லடா நான் ஒரு கட்சி ஆரம்பிக்கிறேன் என்று அண்ணனிடம் சொல்ல வேண்டாமா?' என்று வெகுளித்தனமாகக் கேட்டான்" என்றவர் கொஞ்சம் இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடர்ந்தார்.
"என் நண்பன் விஜயகாந்த்தை இழக்கப் போகிறேன் என்பதை 2018லேயே நான் முடிவு செய்துவிட்டேன். அப்போதுதான் டப்பிங் யூனியன் தேர்தலுக்காக ஓட்டு கேட்கப் போனேன். அவரை கல்யாண மண்டபத்தில்தான் போய் பார்த்தேன். அண்ணி எப்படி இருக்கிறார்? வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் என எல்லோரையும் கேட்டார்.

அதன்பிறகு பக்கத்தில் வந்து என்னை யார் என்று கேட்டார். உடனே நான் அவரிடம் 'நீ ஓட்டுப் போட வரவேண்டாம்' என்று சொன்னேன். ஏனென்றால், அவர் அங்கு வந்து ஏதேனும் மயங்கி விழுந்துவிட்டால்? அவனை நான் சிங்கம் போல் மனதில் வைத்திருக்கிறேன். அவனுக்கு ஏதேனும் அங்கு ஆகிவிட்டால் யார் பொறுப்பாவது என்று பயந்தேன். ஆகவே அப்படிச் சொன்னேன்.
கடைசியாகப் போன டிசம்பரில் 2வது முறை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது எனக்குச் சந்தேகம் அதிகமாகிவிட்டது. அவனது கடைசி காரியம் நல்லபடியாக அமைந்தது.

அந்த நல்ல மனிதனுக்குக் கடைசியாக எல்லாம் நல்லபடியாக அமைந்தன. முதல்வரே விஜயகாந்த் இறுதி காரியத்தில் அதிக அக்கறைகாட்டினார். முதலில் காலையில் வீட்டுக்கே வந்தார் முதல்வர். அடுத்து இறுதி அஞ்சலிக்கும் வந்தார். கட்டாயம் அதற்காக இந்த அரசுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
எங்கள் இருவருக்கும் இருந்த நெருக்கம் போல் வேறு யார் கூடவும் அவன் இருந்தது இல்லை. விஜயகாந்த் அரசியலுக்குப் போன பிறகுதான் எங்களுக்கு இடைவெளி உருவானது. இருவருக்கும் எந்த சண்டையும் இல்லை. ஆனால் மனதளவில் ஒரு இடைவெளி உருவானது.

நான் அவனை விஜிம்மா என்றுதான் அழைப்பேன். அவன் என்னை டேய் ரவி என்று அழைப்பான். எங்கள் நட்பு வட்டத்தில் விஜயகாந்த்தான் ஹீரோ. அப்புறம் நான். அடுத்து எஸ்.எஸ்.சந்திரன், நடிகர் பாண்டியன். எப்போதாவது தான் எங்கள் குழுவில் வந்து நடிகர் தியாகு வந்து சேருவார்.
விஜயகாந்த் மதுரையிலிருந்து வந்தவர். நான் திருச்சிக்காரன். எனக்கு அவருக்கும் சம்பந்தமில்லை. ஆனால், எங்களுக்குள் பல விசயங்கள் ஒற்று போயின. நானும் ஒபன் டைப். அவனும் ஓபன் டைப். இரண்டு பேரும் உளமார பழகினேன்.

விஜிம்மா திரையுலகில் உச்சத்திலிருந்தபோது கூட உன் படத்தில் ஒரு வாய்ப்பு கொடுப்பா என்று நான் கேட்டதே இல்லை. இருந்தும் நானும் அவரும் சேர்ந்து 30 படங்கள் வரை நடித்திருப்போம் என்று நினைக்கிறேன்.
அவனுக்கு ஃபைட் என்றால் விரும்பி செய்வான். அதே டான்ஸ் என்றால் தயங்குவான்.அவ்வளவாக வராது. வேகமாக கார் ஓட்ட விஜிம்மாக்குப் பிடிக்கும். நானும் வேகமாக கார் ஓட்டுவேன். அதற்காகச் சேலம் வரை சென்று அங்கிருந்து கோயமுத்தூர் வரை ரேஸ் போடுவோம். அங்குதான் ரோடு நன்றாக இருக்கும்.

அவரது மனைவி வந்த பிறகுதான் எங்கள் நட்பில் ஒரு இடைவெளி ஏற்பட்டது. எதற்கு எடுத்தாலும் அவரைக் கதவுதான் விஜிம்மாவை பார்க்க வேண்டிய நிலை வந்தது. ஆகவே சந்திப்பதைத் தவிர்க்கத் தொடங்கினேன். அதுதான் உண்மை" என்கிறார் ராதாரவி.












Click it and Unblock the Notifications