ராதாபுரத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கூடாது.. ஹைகோர்ட்டில் எம்எல்ஏ இன்பதுரை அவசர வழக்கு
Recommended Video
சென்னை: ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக எம்எல்ஏ இன்பதுரை அவசர வழக்கு ஒன்றை, தொடர்ந்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் மறு வாக்கு எண்ணிக்கை நடக்க கூடாது என மனுவில் கோரியுள்ளார்.
2016ஆம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலின்போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் அதிமுகவின் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் அப்பாவுவை வெற்றி பெற்றார்.
இதில் 203 தபால் ஓட்டுகள் செல்லாது என்று தேர்தல் அலுவலர்கள் அறிவித்ததாகவும், ஆனால் அது செல்லத்தக்கது என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அப்பாவு.
அந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தபால் வாக்குகளையும், இறுதி சுற்று வாக்குகளையும் மறுபடியும் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதற்கான கால நேரத்தை தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையத்தை, நீதிபதி கேட்டுக்கொண்டார். இந்த வழக்கில் பதிலளித்த, தேர்தல் ஆணையம், வரும் நாலாம் தேதிக்குள், தபால் வாக்குகளையும், கடைசி மூன்று சுற்று வாக்குகளையும் மறுபடியும் எண்ணுவது என்பது சிரமமான காரியம். அதற்கு கூடுதல் கால அவகாசம் மற்றும் ஆள் பலம் தேவை என்று தெரிவித்தது.
இதனிடையே இன்பதுரை தரப்பில், அவசரமாக ஒரு முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், மறு வாக்கு எண்ணிக்கை உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதால் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அதுவரை வாக்குகளை என்ன கூடாது என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிலளிக்க அப்பாவுக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம் வரும் வியாழக்கிழமைக்கு, வழக்கை ஒத்திவைத்தது.