திருத்தம்.. கனிமொழியை எதிர்த்து போட்டியிட போவது... சித்தப்பா இல்லையாம்.. "சித்தி"யாம்!
தூத்துக்குடி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட வாய்ப்பு என கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட போவது யார் தெரியுமா? நம்ம சாட்சாத் "சித்தி"யேதான் என்று சொல்கிறார்கள்.
இன்னும் கொஞ்ச நாளில் எம்பி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால் இது சம்பந்தமான கூட்டணி, தொகுதி பங்கீடு, சீட் விவகாரம், என சில கட்சிகள் சைலன்ட்டாகவும், சில கட்சிகள் பகிரங்கமாகவும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
கருணாநிதி, ஜெயலலிதா 2 பேருமே இல்லாமல் முதல்முறையாக எதிர்கொள்ளும் தேர்தல் என்பதால் வரப்போகிற தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் திமுகவா, அதிமுகவா என்ற கேள்வி மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு பாரம்பரிய கட்சிகளுமே தங்களை நிலைநிறுத்தி கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளன.
அதிமுக வேட்பாளர்
தூத்துக்குடியை பொறுத்தவரை பெரும்பாலும் நாடார் சமுதாயம் ஆக்கிரமித்துள்ளது. இதில் திமுகவில் கனிமொழி நிறுத்தப்படலாம் என்ற கருத்து முன்பிருந்தே பேசப்பட்டு வருகிறது. அதேபோல, இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை.
சரத்குமார்
சில தினங்களுக்கு முன்பு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தமிழக முதல்வரை சந்தித்து பேசினார். எதற்கான சந்திப்பு என்பது முழு விவரமாக நமக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்றாலும், கூட்டணியில் இணைவதற்கான சாத்திய கூறுகள் எழுந்துள்ளதோ என்று பார்க்கப்பட்டது.
பரிச்சய தொகுதி
ஆனால் கூட்டணி சம்பந்தமான பேச்சு உறுதியாக முடியவில்லை என்றாலும், சரத்குமார் தூத்துக்குடியை விடமாட்டார். போன தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றி பெற சரத்குமார், ரோட்டில் வந்து கொண்டிருந்து ஒரு தொண்டர் பைக்கில் திடீரென ஏறி உட்கார்ந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
ராதிகா சரத்குமார்
பிறகு சிலம்பாட்டம் ஆடிக் கொண்டிருந்த மைதானத்திற்கு சென்று, தானும் ஒரு சிலம்பம் எடுத்து சுழட்டி சுழட்டி அடித்து வாக்கு கேட்டார். ஆனால் சொற்ப வித்தியாசத்தில் வெற்றியை இழந்தார். அதனால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என்று திடமாக நம்புகிறார். அதற்காக மனைவி ராதிகாவை இந்த தொகுதியில் இறக்கவும் முடிவு செய்துள்ளார் என்று சொல்கிறார்கள்.
பெண்கள் ஆதரவு
இதற்கு காரணம், ராதிகா நன்கு அறிமுகமான ஒரு முகம். சரத்குமார் ஓட்டு கேட்க வரும்போதெல்லாம் ராதிகாவும் தூத்துக்குடி மக்களை சந்தித்தும் பேசியும் வந்ததால், நன்கு பரிச்சயம். மேலும் சீரியல் மோகம் பிடித்த பெண்களின் ஆதரவும் ராதிகாவுக்கு நிறையவே உள்ளது.
அமோக வரவேற்பு
ஜெயலலிதா இருக்கும்போது தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றவர் சரத்குமார். இப்போது பலவீனமான அதிமுக, சரத்குமாருக்கு ஒரு லோக்சபா தொகுதியை கொடுத்து தங்களுடன் கூப்பிட்டு கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதை மனதில் கொண்டே போன வாரம் அங்கு மகளிர் அணியை சந்தித்து கூட்டத்தை நடத்தினார் ராதிகா என்கிறார்கள். அந்தக் கூட்டத்துக்கு பெண்கள் அமோக வரவேற்பாம்.
மக்களை கவர திட்டம்
தூத்துக்குடியின் தெற்கு பகுதியான அதாவது திருவைண்டம், ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர் போன்ற இடங்களில்தான் நாடார் இன மக்கள் அதிகம். இவர்களின் வாக்குகளை முழுமையாக கவர சரத்குமார் தீவிரமாக உள்ளாராம். இதன் மூலம் ராதிகாவுக்குத் தேவையான சமுதாய பலத்தை தன் பக்கமிருந்து திரட்டித் தர முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் சரத்குமார்.
கனிமொழியா? ராதிகாவா?
ஒருபக்கம் கனிமொழி.. இன்னொரு பக்கம் ராதிகா என்று மோதும்போது... தூத்துக்குடி நாடார் சமுதாயத்தினர் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.