டார்ச் லைட் சின்னத்திற்கு ஓட்டு கேட்ட ராதிகா...'சித்தி' என்று கூப்பிட்டு சந்தோஷப்படுத்திய சிறுவர்கள்
சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் நடிகை ராதிகா பரபரப்பாகவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். மக்கள்நீதி மய்யம், ஐஜேகே, சமக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பிரசாரம் செய்யும் ராதிகாவை சித்தி என்று பாசத்தோடு கூப்பிட்டு உற்சாகப்படுத்துகின்றனர் சிறுவர்கள். அதைப்பார்த்து புன்னகைக்கும் ராதிகா, 'நல்லா படிங்க... எங்கே போனாலும் மாஸ்க் போட்டுட்டு போங்க', என்று அக்கறையுடன் கூறி வருகிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் பலமுனை போட்டி நிலவுவதால் இந்த சட்டசபைத் தேர்தல் களத்தில் பிரசாரமே புதுமாதிரியாக உள்ளது.
ஆளும் கட்சி, எதிர்கட்சி தவிர புதிய கூட்டணி கட்சியினரும் வாய்ப்பு கேட்டு மக்கள் முன்பாக வாக்கு கேட்டு வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்துள்ள சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர்களும் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். சரத்குமாரும் ராதிகாவும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் பல தொகுதிகளிலும் படு பரபரப்பாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
ஸ்ரீபிரியாவுக்கு ஓட்டு கேட்ட ராதிகா
சென்னை மயிலாப்பூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியாவை ஆதரித்து சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் வாக்கு சேகரித்த ராதிகா, மக்களாகிய உங்களை நம்பித்தான் ஒரு புதிய அணியை உருவாக்கி இருக்கிறோம். திராவிட கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்களித்து எந்த பயனையும் அடையவில்லை என்றார்.
ஏமாந்தது போதும்
அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளையும் நம்பி நம்பி ஏமாந்தது போதும். இந்த ஒரு தடவை கொஞ்சம் யோசிங்களேன். ஒரு நல்ல மாற்றத்துக்காக எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்துதான் பாருங்களேன். நீங்க மட்டும் எங்களுக்கு ஆதரவு தந்து பாருங்கள். ஒரு நல்ல அரசியலை நாங்கள் முன்னெடுத்து காட்டுகிறோம் என்றார்.
கடனில் தத்தளிக்கும் தமிழகம்
தற்போது 2 கட்சிகளும் தேர்தலுக்காக கவர்ச்சிக்கரமான அறிவிப்புகளை அறிவித்து இருக்கிறார்கள். தமிழகம் கடனில் தத்தளிக்கும்போது வாஷிங்மெஷின் இலவசமாக எதற்கு? உயிர்காக்கும் விஷயத்தில் அக்கறை செலுத்தாமல் வாஷிங்மெஷின் எதற்கு தருகிறார்கள்? என்று யோசியுங்கள். திமுகவும் இலவச அறிவிப்புகளை மனம் போன போக்கில் அறிவித்திருக்கிறார்கள். 100 நாட்களில் குறைகளை தீர்ப்பதாக பொய் பிரசாரத்தை முன்னெடுத்து வருவதாக ராதிகா குற்றம் சாட்டினார்.
ஒளிரும் தமிழகம்
மீனை பிடித்து அதை கையில் கொடுப்பது சிறப்பு அல்ல. அந்த மீனை தூண்டில் மூலம் எப்படி பிடிப்பது? என்று கற்றுத்தருவதே சிறப்பு. அதைத்தான் நாங்கள் செய்ய வந்திருக்கிறோம். எனவே இந்த முறை 'டார்ச் லைட்' சின்னத்துக்கு வாக்களித்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள். இருளில் உள்ள தமிழகம் ஒளிரும் என்றும் ராதிகா கூறினார்.
சிரித்த ராதிகா
பிரசாரத்தற்கு இடையே நடிகை ராதிகா உரிமையோடு அங்கிருந்த பெண்களைப் பார்த்து இன்னைக்கு உங்க வீட்ல என்ன குழம்பு என்று கேட்க அதைக்கேட்டு பலரும் சந்தோஷப்பட்டனர். அப்போது சிறுவர்கள் சிலர் சித்தி... என்று சத்தமாக கூப்பிட குரல் வந்த திசையைப் பார்த்த ராதிகா அந்த சிறுவர்களைப் பார்த்து சிரித்தார். நல்லா படிங்கப்பா... மாஸ்க் அவசியம் போடுங்க என்றும் அக்கறையோடு சொன்னார்.