குமரிக்கு நோ.. கேரளாவிற்கு டிக் அடித்த ராகுல்.. காங்கிரஸ் முடிவால் தமிழ்நாட்டிற்கு பின்னடைவா?
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் வயநாட்டில் தேர்தலில் போட்டியிடுவது தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் வயநாட்டில் தேர்தலில் போட்டியிடுவது தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.
இரண்டிற்கும் அவர் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். தமிழகத்தில் அவர் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கைகள் எல்லாம் நிராகரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்சனை
தமிழகம் - கேரளா இடையே முல்லைப்பெரியாறு பிரச்சனை மீண்டும் தலைதூக்கும் நிலையில் இருக்கிறது. இது தொடர்பாக மீண்டும் வழக்குகள் போடப்படும் நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தி கேரளாவில் இருந்து போட்டியிடுவது தமிழகத்திற்கு பின்னடைவாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

எப்படி இருப்பார்
ஒருவேளை காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் பெரும்பான்மை பெற்று, ராகுல் காந்தி பிரதமராகும் நிலையில், அவர் இரு மாநில பிரச்சனையில் கேரளாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவே அதிக வாய்ப்பு இருக்கும். கேரளாவை சேர்ந்த எம்.பி என்ற நிலையில் அவர் கேரளாவிற்கு ஆதரவாக செயல்படுவாரா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

இப்படியா
கேரளா தமிழகம் இடையே தண்ணீர் பிரச்சனை மட்டுமில்லாமல், எல்லையில் குப்பை கொட்டுவது, அரிசி கடத்துவது உள்ளிட்ட பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு இடையில் பொதுவாக சமரசம் பேச வேண்டிய தலைவர் ஒருவர், ஒரு மாநிலத்தின் தொகுதியில் போட்டியிடுவது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனாலும்
தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. முதலில் இந்த கோரிக்கையை வைத்ததே தமிழகம்தான். ஆனால் அதை மறுத்துவிட்டு, அவர் கேரளாவை தேர்வு செய்தது ஏன் என்பதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.

ராகுலுக்கு வரவேற்பு
தனிப்பட்ட வகையில் கூட ராகுல் காந்திக்கு அதிக வரவேற்பு கொடுக்கும் மாநிலம் தமிழகம்தான். ராகுலை முதல்முறையாக பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது கூட திமுக தலைவர் ஸ்டாலின்தான். அப்படி இருக்கும் பட்சத்தில் ராகுல் கேரளாவை தேர்வு செய்து இருப்பது தமிழக திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஏமாற்றத்தை அளித்து இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.












Click it and Unblock the Notifications