ராகுல் காந்திக்கு ஆதரவாக களமிறக்கும் தொண்டர்கள்.. நாளையே திடீரென அறப்போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்
சென்னை: அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற ராகுல் காந்தி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுக்க நாளைய தினம் காங்கிரஸ் கட்சி அறப்போராட்டத்தை அறிவித்துள்ளது
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி 2019இல் கோலாரில் பேசும் போது, மோடி என்று பெயர் வைத்துள்ள அனைவரும் ஒரே போல இருப்பதாகச் சொல்லி, சர்ச்சை கருத்து ஒன்றையும் தெரிவித்தார்.
இது தொடர்பாக சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுல் காந்தி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

ராகுல் காந்தி
இதன் காரணமாக ராகுல் காந்தி இப்போது தனது எம்பி பதவியை இழந்துள்ளார். ராகுல் காந்திக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை எதிர்த்து ஏற்கனவே திங்கள் முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. முக்கிய தலைவருக்கு எதிராக இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக போராட்டத்தை நடத்தாமல் பொறுமையாகத் திங்கள்கிழமை போராட்டத்தை நடத்துவதா என்று விமர்சனங்களும் எழுந்தன. இதற்கிடையே நாளைய தினம் அறப்போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

அறப்போராட்டம்
இது குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் நாளை நாடு தழுவிய அளவில் அறப்போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். காலை 10 மணி முதல் இந்தியா முழுவதும் சத்தியாகிரக போராட்டத்தை நடத்துவோம். இது அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும்" என்றார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தேசிய தலைநகர் டெல்லியில் சத்தியாகிரக போராட்டத்தை நடத்த உள்ளனர்.

கேஎஸ் அழகிரி
அதேபோல தமிழ்நாடு முழுக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் காந்தி சிலை முன் போராட்டம் நடத்தப்படும் என கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் மக்களின் பேராதரவைப் பெற்று, எதிர்க்கட்சிகளின் உரிமைக்குரலாக ஒலித்த தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதன் மூலம் உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது.

பிரதமர் மோடி, அதானி உறவு
தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் இருக்கிற உறவு குறித்து குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார். பிரதமர் மோடி தமது நண்பர் கவுதம் அதானிக்கு பொருளாதார ரீதியாக ஆதாயம் அடைவதற்கு பல்வேறு உதவிகளை செய்ததை மக்களவையில் தலைவர் ராகுல் காந்தி ஆதாரத்துடன் பேசியதை பா.ஜ.க.வினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவரது உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிற ஜனநாயக விரோத செயலை செய்திருக்கிறார்கள். தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே அவசர அவசரமாக அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.

சத்தியாகிரக அறப்போராட்டம்
இத்தகைய ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்ல, கட்சி எல்லைகளை கடந்து கோடிக்கணக்கான மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். தலைவர் ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியின் மூலம் இந்திய ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பா.ஜ.க.வின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராக தலைவர் ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்துகிற வகையில் நாளை (26.03.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மகாத்மா காந்தி சிலை முன்பு ஒரு நாள் சத்தியாகிரக அறப்போராட்டத்தை மாவட்ட தலைநகரங்களில் நடத்தும் படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியிருக்கிறது.

சிதம்பரத்தில் கே.எஸ் அழகிரி
இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அறப்போராட்டத்திற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும். இப்போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்களின் ஆதரவைப் பெருமளவில் திரட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் நடைபெறும் சத்தியாகிரக அறப்போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications