'சென்னைக்கு உதவுங்கள் ப்ளீஸ்..' வெளுத்து வாங்கும் கனமழை.. வேண்டுகோள் விடுத்த ராகுல் காந்தி
சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு மழைக்காலத்தில் தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த அக். 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது முதலே மாநிலத்தில் பரவலான கனமழை பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று மாலை கரையைக் கடக்கிறது. ஸ்ரீஹரி கோட்டாவுக்கும், காரைக்காலுக்கும் இடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கிறது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை தொடங்கி டெல்கா மாவட்டங்கள் வரையிலும் கூட கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ள பாதிப்பு
குறிப்பாகச் சென்னையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேற்கு மாம்பலம், அசோக் நகர், தி நகர், கோடம்பாக்கம், நந்தனம், அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை என பல்வேறு பகுதிகளிலும் நீர் தேங்கியுள்ளது. மழை நீரை மோட்டர் கொண்டு வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், தொடர்ந்து பெய்து வரும் மழையால் சில பகுதிகளில் இன்னும் மழைநீரை வெளியேற்ற முடியவில்லை. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக மின் சேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி ட்வீட்
இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழை கவலை அளிப்பதாக ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் இடைவிடாது பெய்துவரும் மழை கவலையை ஏற்படுத்துகிறது. அங்குள்ள சகோதர சகோதரிகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் தொண்டர்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பத்திரமாக இருங்கள்" என ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video

முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களாக நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வு செய்தார். மேலும், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளையும் முதல்வர் ஆய்வு செய்கிறார். மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளும் வகையில் சிறப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், தொடர்ந்து பெய்து வரும் மழையால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மழை அதிகமாக இருக்கும்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கிறது. பொதுவாகப் புயலாக வலுப்பெற்றால் மழை சற்று குறைந்து காற்றின் வேகம் அதிகரிக்கும். ஆனால், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடப்பதால் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடந்த பின்னர் மழை குறையும் என்பதால், நாளை முதல் சீரமைப்பு பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகார் அளிக்க
சென்னை மாநகராட்சியின் உதவிகளைப் பெற 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் 94454 77205, 94450 25818, 94450 25820, 94450 25821 என்ற எண்களில் வாட்ஸ்அப் செயலியிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மின் சேவை குறித்த புகார்களை மின் நுகர்வோர் சேவை மையமான 98987 94987 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு அளிக்கலாம்.












Click it and Unblock the Notifications